மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது.  சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11-ம் திருநாள் அன்று  ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டனப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை  பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டினப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை.




இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த ஆண்டு மே மாதம் பல்லக்குதூக்கும் (பட்டினப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை அப்போதைய கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டினப் பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்த நிலையில், பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால், பட்டினப் பிரவேசம் நிகழ்வு தமிழகம் முழுவதும் பிரபலமானது. 




வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள  மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், கடந்த ஆண்டு பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர் உலகளவில் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது. பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையில், டிஐஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு தடைகளை கடந்து  பட்டினப்பிரவேசம் விழா கோலாகலமாக நடைபெற்றது. 




அதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபாரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமை தலைமையில் 70 பேர் தோளில் சுமந்த ஆதீனத்தை சுற்றி நான்கு  வீதிகளில் வலம் வந்தனர்.  இவ்விழாவில்  சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள்  மற்றும்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா,  பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 3000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 





இந்நிலையில் இந்தாண்டு வைகாசி பெருவிழாவானது கடந்த 31 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்வான பட்டனப்பிரவேசம் இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.  இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான பட்டனப்பிரவேச திருவிழா இன்று இரவு நடைபெறவுள்ளதை அடுத்து  மனிதனை மனிதன் சுமந்து செல்வது மனிதஉரிமை மீறல் என்று கூறி பட்டனப்பிரவேச விழாவிற்கு திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ்மண் தன்னூரிமை இயக்கம் ஆகிய கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 




காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தராத நிலையில் தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பட்டனப்பிரவேசம் மேற்கொள்ளும் தருமபுர ஆதீனகர்தருக்கு எதிராகவும், தடைவிதிக்க கோரியும் முழக்கமிட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த மயிலாடுதுறை காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை குத்தாலத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைந்துள்ளனர். மேலும் பட்டனபிரவேச நிகழ்வுக்கு எதிர்ப்பு உள்ளதால்  மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ADSPக்கள், 7 DSPக்கள், 14 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 360 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.