கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள  தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த போது பெற்றோர்கள் கதவு பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்கதாதால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றனர். அப்போது மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் மாணவி பிணமாக தொங்கிக் கொண்டு இருப்பது தெரியவந்தது.


இதுகுறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ”மாணவி அந்த பள்ளியை பிடிக்கவில்லை என இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறொரு பள்ளிக்கு மாறினார். பள்ளி மாற்றத்திற்கான காரணம் குறித்து கேட்ட போது, முறையாக பதிலளிக்கவில்லை. கடந்த 6 மாதமாக அடிக்கடி வீட்டில் அழுவாள். காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டாள். 


மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் போன் எண்ணை வாங்கி சாட் செய்து வந்துள்ளார். ஆசிரியர் என்ற முறையில் மாணவியும் பேசி வந்துள்ளார். பள்ளியில் தாமதம் ஏற்பட்டால் தனது வண்டியில் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என மறைத்து விட்டனர். அப்பள்ளி தலைமையாசிரியர் பெற்றோரிடமும் சொல்ல வேண்டாம் என சொல்லியுள்ளார். உளவியல் ஆலோசணையும் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார்” என அவர் தெரிவித்தார்.


இது குறித்து பள்ளி தலைமையாசிரியை கூறுகையில், ”கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் குடும்பத்தோடு மதுரைக்கு இடம் பெயர இருப்பதால், மாணவியின் குடும்பத்தினர் மாற்றுச்சான்றிதழ் கேட்டனர். இரு நாட்களில் அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து விட்டோம். அதற்கு பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை” என்றார். அதேசமயம் ஆசிரியர் மிதுன் குறித்து பேச மறுத்த அவர்,  ”பள்ளி தாளாளரிடம் பேசாமல் எதுவும் பேச முடியாது” என்றார்.




இந்நிலையில் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி புகைப்படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மாணவி புகார் அளித்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 




அப்போது தபெதிக அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் லலிதா கூறும் போது, ”ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து 6 மாதமாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். மாணவி பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தபோது, பஸ்சில் செல்லும் போது இடிப்பார்களே, அதுபோல நினைத்துக் கொள் என கூறியுள்ளார். இச்சம்பவம் பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. மாணவி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். பெற்றோருக்கு தெரியாமல் பள்ளி நிர்வாகம் மாணவிக்கு தனியாக கவுன்சிலிங் கொடுத்துள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மற்ற மாணவிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050