விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கல்சிறுநாகலூரை சேர்ந்தவர் உமாபார்வதி (28). இவருக்கும் கோட்டையாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகனான கூலித்தொழிலாளி சிலம்பரசன் (33) என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது உமாபார்வதியின் பெற்றோர், வரதட்சணையாக 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை கொடுத்துள்ளனர். திருமணமான 3 மாதங்களிலேயே சிலம்பரசன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி உமாபார்வதியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகு 7 மாத கர்ப்பிணியாக இருந்த உமாபார்வதியிடம், திருமணத்தின் போது தருவதாக கூறிய மேலும் 5 பவுன் நகையை பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி கேட்டு சிலம்பரசன் துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அவரது தந்தை ஏழுமலை, தாய் கலியம்மாள், உறவினர் முனுசாமி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.




இதனால் உமாபார்வதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இதுபற்றி கூறியுள்ளார். உடனே உமாபார்வதியை அவரது தாய் பூமாலை, கோட்டையாம் பாளையத்திற்கு அழைத்து வந்து சிலம்பரசன் மற்றும் அவரது பெற்றோரிடம் தான் செய்ய வேண்டிய சீர்வரிசைகளை உமாபார்வதியின் 9-வது மாத வளைகாப்பின்போது வழங்குவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகும் உமாபார்வதியை சிலம்பரசன் உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் கடந்த 2014 ஆம் ஆண்டு உமாபார்வதி அதே கிராமத்தில் உள்ள தங்கராஜ் என்பவரின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பூமாலை அளித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், ஏழுமலை, கலியம்மாள், முனுசாமி ஆகியோரை கைது செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.




இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சிலம்பரசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், ஏழுமலை, கலியம்மாள், முனுசாமி ஆகிய 3 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிலம்பரசன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர