திருவாரூர் அடுத்த கிடாரங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர்  சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதிக்கும், கும்பகோணத்தை சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றுள்ளது. விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். மணமக்கள் இருவரும் திருமண ஆன சில மாதங்களில் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவிற்கு சென்றுவிட்டனர். அங்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டதால் ஜெயபாரதியையும், குழந்தையையும் திருவாரூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கே விஷ்ணு பிரகாஷ் அனுப்பிவிட்டார் 


பலமுறை தனது பெண்ணை கணவனுடன் சேர்த்துவைக்க ஜெயபாரதியின் பெற்றோர் முயற்சித்தும்  பலனில்லாத்தால் கும்பகோணம் மகளிர் காவல்நிலையத்திலும், முதலமைச்சர் தனி பிரிவுக்கும், சமூக நலத்துறைக்கும் புகார் அளித்தும் பலன் இல்லாததால் 50 நாட்களுக்கு முன் ஜெயபாரதி விவாகரத்து கேட்டு கணவர் விஷ்ணு பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்சனையால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் தனக்கு வேலை போய்விடும் எனவும், உடனடியாக நோட்டீஸை வாபஸ் பெற வேண்டும் என விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயபாரதியையும், அவரது பெற்றோரையும் ஃபோனில் மிரட்டியதாக கூறப்படுகிறது.


இதனிடையே ஜெயபாரதிக்கு தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை கிடைக்கவே தப்பளாம்புலியூர் கிராமத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் ஜெயபாரதி பணி முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வரும்போது வாகனம் மோதி விபத்தில் உயிரிழந்து கிடப்பதாக ஜெயபாரதியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக திருவாரூர் தாலுக்கா காவல்துறையின் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு கார் விபத்தில் இறந்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்தனர்.



இதனிடையே ஜெயபாரதியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது விபத்தில்லை எனவும் திட்டமிட்டு வாகனத்தை வைத்து ஜெயபாரதியை கொலை செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டி உரிய விசாரணை நடத்தவேண்டும் என பாரதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். வாகனம் திருவாரூரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும், அதை இருதினங்களுக்கு முன்பு கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த ஒருவர் வாங்கி சென்றதாகவும் வாங்கியவர் விவரமோ, வாகனத்தில் வந்தவர்கள், ஓட்டுநர் பற்றியோ விவரம் தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.


மேலும் அன்று காலை ஜெயபாரதி வேலைக்கு செல்லும்பொழுது விபத்து ஏற்படுத்திய வாகனம் அவரை பின்தொடர்ந்து சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமிட்டு ஜெயபாரதியை கொலை செய்துள்ளாக போலீசாரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.