நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவிதாசன் என்கிற ரவிக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாகையின் பழமைவாய்ந்த  நிறுவனம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர். குறிப்பாக சிவசக்தி நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால்,  வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருந்தனர். இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர். 



 

ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் கால அவகாசம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்த நிலையில்  நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட சிவசக்தி நிதி நிறுவனத்தின்  உரிமையாளர் ரவி மற்றும் அவரது மகன்கள் ஜெய்சிவா, செந்தில்குமார், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு நபர்களையும் நாகப்பட்டினம்  நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.