காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 11 மணி வரை பல்வேறு இடங்களில், 4 பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் வழிப்பறியில் பட்டாக்கத்தியுடன் ஈடுபட்டு, பணம் கொடுக்க மறுப்போரை கத்தியால் வெட்டி அச்சுருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குள்ளப்பன் தெருவில் விமல் என்பவர் வீட்டின் சிறிய அளவில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில், கடைக்கு வந்த 3 இளைஞர்கள் தண்ணீர் பாட்டில் வேண்டும் என கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் பாட்டிலை எடுப்பதற்குள் பட்டாகத்தியை காட்டி, அவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.

 


இரண்டாவது சம்பவம்

 

இதேபோல் சுண்ணாம்புக்கார தெரு, அமுது படி சாலை,  தேனம்பாக்கம் சாலை என பல்வேறு இடங்களில் சாலையில் வருவோரை பட்டாக்கத்தியால் , வெட்டி பணம் மட்டும் செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர். வெட்டு காயங்கள் இருந்த ஆனைகட்டி தெருவை சேர்ந்த சகோதரர்கள் சுரேஷ் மற்றும் ஆனந்தன், சேஷாத்திரி பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ், காஞ்சிபுரம்  டோல்கேட் பகுதியை சேர்ந்த சீனு மற்றும் வீரராகவன் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த தயாளன், சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 7 நபர்களும் ஒன்றன்பின் ஒன்றாக பலத்தை வெட்டு காயங்களுடன் கடும் ரத்தம் வெளியேறிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 

பலர் காவல் நிலையத்தில் தஞ்சம்

 

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து பல புகார் அளிக்க காவல் நிலையத்தில் குவிந்ததால் காவல் நிலையமும் பரபரப்புடன் காணப்பட்டது. உடனடியாக ரோந்து சென்று கொண்டிருந்த காவலர்களும் உஷாராகி, தீவிர கண்காணிப்பில் இரவில் கூடுதலாக காவலர்கள் வர வைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் முடக்கி விடப்பட்டன.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை உடனடியாக கைப்பற்றி சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இளைஞர்கள் பல்சர் பைக் சுற்றி தெரிந்தது கண்டுபிடிக்கப்பட்டு, காவலர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் காவலர்கள் குற்றவாளியை கைது செய்திருப்பது, மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தப்பி ஓட முயன்ற புறா என்கிற தினேஷ்

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பெயரில் தனிபடைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளின் அடையாளங்களை அடிப்படையாக கொண்டு தீவிரமாக தேடிவந்த நிலையில் தற்போது இது தொடர்பாக டோல்கேட் பகுதியை சேர்ந்த புறா என்கிற தினேஷ் குமார் மற்றும் அதே போன்று டோல்கேட் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் தினேஷ் காவலர்களை பார்த்து தப்பி செல்லும் முயன்ற போது, கீழே விழுந்து வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் அவருக்கு அரசு மருத்துவமனையில் மாவு கட்டுபோட்டனர்.

 


 

கஞ்சா என்பது இங்கு சாதாரணம்

 

 காஞ்சிபுரம் பகுதிகளில், கஞ்சா கிடைப்பது மிக சர்வ சாதாரணமாக ஆகிவிட்டதாகவும், பள்ளி மாணவர்களுக்கு கூட கஞ்சா கிடைப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வேண்டும் என்றால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் மீண்டும் ரவுடிகளின் அட்டகாசம் துவங்கியிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .