மதன் மற்றும் டாக்ஸிக் மதன் 18+ ஆகிய யூ-டியூப் சேனல்களில் லைவ் வீடியோ கேம்களின்போது தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்தவர் மதன். இவரது பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல சமூக தளங்களில் மதனுக்கு எதிராக புகார்கள் குவிய, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், விசாரணைக்கு ஆஜாராகாமல், மதன் தலைமறைவாகியுள்ளார். VPN எனப்படும் IP முகவரிகள் மூலம் இருப்பிடத்தை கண்டறிய இயலாத VIRTUAL PRIVATE NETWORK-ஐ மதன் பயன்படுத்தி வந்தததால் அவரின் இருப்பிடத்தை கண்டறிந்து விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு மனுவினை நேற்று மதன் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்தார். 


தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டை  சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணைய சேவை மூலம் பயன்படுத்தும் மதன் மீது ஆபாசமாக பேசி யூ ட்யூப் சேனல்களில் வெளியிட்டதால் சிக்கியுள்ளார். யூ ட்யூபர் மதன் மீது தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுவரை சுமார் 160 புகார்கள் மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆபாச யூ ட்யூபர் மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் சென்ற தனிப்படை மதனின் வீட்டிற்கு சென்று விசாரித்ததில் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. 


இதையடுத்து மதனின் மனைவி, மதனின் தந்தையையும் அழைத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மத்திய குற்றப்பிரிவில் சைபர் பிரிவில் நவீன தொழில் நுட்ப வசதி கொண்ட சைபர் ஆய்வகம் இருப்பதால், தொழில் நுட்ப உதவியுடன் தப்பிக்கும் மதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.