கொரோனா பெருந்தொற்று முதல் அலை காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400 சதவிகிதம் வரை அதிகரித்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிக மிக அதிகம்.  இவை பெரும்பாலும் பாலியல் ரீதியாகக் குழந்தைகளைப் புகைப்படம் எடுப்பது அதனை பொதுவெளியில் பகிர்வது போன்ற குற்றங்கள் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ளது.


இதன்படி குற்ற எண்ணிக்கையில்  உத்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன. 
842 ஆன்லைன் குற்றப்புகார்களில் 738 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாகப் பதியப்பட்டுள்ளன.


இது 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 400 சதவிகிதம் அதிகம். 


2019ம் ஆண்டு நிலவரப்படி 164 குற்றங்கள் சிறுவர்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ளன. அதுவே 2018ல் 117 எனவும் 2017ல் 79 எனவும் இருந்துள்ளது. 738 என்பது சிறிய எண் இல்லை, அதுவும் 164லிருந்து இந்த எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது 



கொரோனா காலத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் மாணவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்து வலுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்துத்தன. பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் மீதுதான் இந்தப் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸராக இருக்கும் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி க்ருபாளி என்பவர், தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தொடர்புடைய அந்த ஆசிரியர் மீதான பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் புகாரைப் பகிர்ந்திருந்தார்.அதில், “நீங்கள் என் பள்ளியின் முன்னாள் மாணவி எனத் தெரிகிறது. நானும் உங்களைப் போல வணிகவியல் மாணவிதான். உங்களிடம் ஒரு புகார் அளிக்க வேண்டும். எங்களது ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பில் பல்வேறு மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகிறார். இது ஒருகட்டத்தில் எல்லைமீறி எனது தோழியை சினிமாவுக்கு அழைக்கும் வரை சென்றுவிட்டது. வகுப்பு குழுக்களில் ’பார்ன்’ வீடியோ லிங்க்களைப் பகிர்கிறார். இதுகுறித்து எங்கள் துறைத் தலைவரிடம் புகார் அளித்தும் எந்தவிதப் பயனும் இல்லை. அதனால் நாங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம். இதுபோல நீங்கள் படித்த சமயத்திலும் அவர் இவ்வாறு நடந்துகொண்டதாகப் புகார் எதுவும் எழுந்துள்ளதா எனத் தெரியப்படுத்துங்கள். எங்களது சீனியரும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.