சென்னை சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பெரிய ஓபுளாபுரத்தை அடுத்த ஈச்சங்காடு பகுதியில் கடந்த 18-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (20) என்ற கல்லூரி மாணவனின் சடலத்தை ஆரம்பாக்கம் காவல்துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி பகுதியச் சேர்ந்த கல்லூரி மாணவன் பிரேக்குமார் கொலை செய்யப்பட்ட விபரம் காவல்துறையினருக்கு தெரிந்தது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தினர்.



 

ஆபாச ஆடியோ

 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவர் பிரேம் குமார் கொலை வழக்கில் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகள் சம்மந்தப்பட்டது தெரியவந்தது. அவர்கள் அனைவருடனும் பழகி வந்துள்ளன பிரேம்குமார், இரண்டு மாணவிகளுடன் மட்டும் நெருக்கமாக இருந்துள்ளார்.  மாணவிகளிடம் பிரேம்குமார் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதை தனது மொபைலில் பதிவு செய்துகொண்டு, அதை பெற்றோரிடம் போட்டு காட்டுவேன் என கூறி அவ்வப்போது மாணவிகளிடம் பணம் பெற்று வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் வேறு வழி இன்றி பிரேம்குமாருக்கு பயந்து தொடர்ந்து பணம் கொடுத்து வந்துள்ளனர்.

 



 

இன்ஸ்டாகிராம் நண்பர் செய்த உதவி
  

 

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தன்னுடைய அக்காவிற்கு இந்த சம்பவம் குறித்து தெரிவித்து அழுதுள்ளார். இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் நண்பரான கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவரிடம் கூறி உதவி கேட்டிருக்கின்றனர். அதைக் கேட்டதும் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று என  அசோக் இரண்டு மாணவிகள் மூலம் பிரேம்குமாரை எளாவூர் சோதனைச்சாவடி அருகே வரவழைத்திருக்கிறார். அப்போது பிரேம்குமாருக்காக அசோக், அவரின் நண்பர்கள் காத்திருந்திருக்கின்றனர். பின்னர் பிரேம்குமாரை அவர்கள் கடத்திச் சென்று அவரை அடித்து கொலை செய்து புதைத்துள்ளனர். 



 

இந்த சம்பவம் தொடர்பாக அசோக்குமார் என்கிற அசோக் (21), லெவின் (22), தமிழ்(21) , ஜெகநாதன் 20,, ஸ்டீபன் (21) மற்றும் ஞானசேகரன் (29) ஆகிய 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 6 போதும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதேபோல் இதற்கு காரணமாக இருந்த சிறுமிகள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.