விழுப்புரம் : திண்டிவனம் அடுத்த ந.புதூர் கிராமத்தில் காதலியுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில்  காதலி வேறு ஒருவருடன்  சென்ற நிலையில் திடீர் மணப்பெண்ணாக உறவினர் பெண்ணை மணமுடித்த மணமகன் திருமணமாகி இரு தினங்களில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அந்த வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ந.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு என்பவரது மகன் குமரேசன். இவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 23ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி மணப்பெண் வேறு ஒரு நபருடன் சென்றதாக கூறப்படுகின்றது.




இந்நிலையில் அதிர்ச்சியடைந்த குமரேசன் உறவினர்கள், குமரேசனின் உறவினர் பெண் ஒருவருக்கும் குமரேசனுக்கும் அதே தேதியில் அதே திருமண மண்டபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும் குமரேசன் மனமுடைந்த நிலையிலேயே இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி குமரேசன் தனது விவசாய நிலத்திற்கு சென்ற நிலையில், அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிநத  வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது குமரேசன் இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் பதிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் தன்னை காதலித்த பெண் தன்னை விட்டுவிட்டு ஓடிச்சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரை மறந்தாலும் பழகிய நினைவுகள் மறக்க முடியவில்லை. நான் பதிவிடும் வீடியோவை வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிடுமாறு அப்போதாவது இதுபோன்ற பெண்கள் இது போன்ற செயல்களை செய்யாமல் இருப்பார்கள் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.




அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது, தான் அந்த பெண்ணை 7 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், நிச்சயம் முடிவுற்று கல்யாணம் வரை வந்து அப்பெண் வேறு ஒருவருடன் ஓடிச்சென்று உள்ளது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பெண்ணுடன் பழகிய தருணங்கள் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. பிரிந்து சென்றிருந்தாலும் பரவாயில்லை, 7 வருடமாக காதலித்தவனை 5 மாதத்தில் கிடைத்தவனுக்காக விட்டுவிட்டு சென்றதை ஏற்கவே முடியவில்லை. மேலும் இனி வேறு ஒரு பையனுக்கு இதுபோன்ற செயல் நடைபெற கூடாது எனவும் தன்னுடைய இந்த வீடியோவை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களுக்கும் அனுப்ப வேண்டும் எனவும், நண்பனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளார். திருமணமாகி 3 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.