நெல்லை மாநகர் பாளையங்கோட்டை அடுத்த மூளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்(34). இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். மேலும் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த சூழலில் நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஜெகன் அவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்த பாளையங்கால்வாய் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சூழ்ந்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். ஜெகனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.


தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இத்தகவல் குறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் பிரதீப் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் கொலைக்கான காரணம் தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொள்ளும் பணியும் போலீசாரால் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறை மோப்பநாய் பரணி வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி  நடைபெற்றது. மேலும் அப்பகுதி மக்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை பகுதியில் கொலை சம்பவம் நடைபெற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட  போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கொலை நடைபெற்ற இடத்தில் நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் (பொ) பிரவேஷ்குமார் மற்றும் காவல்துறை துணை ஆணையாளர் சரவணகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.


தொடர்ந்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஊரில் நாட்டாமை தேர்வு செய்வது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதோடு உயிரிழந்த ஜெகன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற பதிவேடு பட்டியலிலும் ஜெகன் பெயர் உள்ளதாக கூறப்படும் நிலையில் இதன் காரணமாக இருந்து வந்த முன்விராதத்தின் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் கடந்த 2 மாதத்தில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். அதோடு கொலை சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்..