19 வயதுடைய பெண் ஒருவர், தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு கும்பல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலியாக போலீஸ் புகார் தெரிவித்த சம்பவம் நாக்பூரில் அரங்கேறியுள்ளது.


நாக்பூர் காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் மகாராஷ்டிராவில் கடந்த திங்களன்று காலை 11 மணியளவில் கலாம்னா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்தனர். நகரம் முழுவதும் உள்ள 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அப்பெண் அளித்த புகார் பொய் என்று கண்டுபிடித்தனர். அந்த பெண் பின்னர் தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக தான் அவ்வாறு செய்ததாக போலீசாரிடம் கூறினார். 


முன்னதாக, நாக்பூரின் சிகாலி பகுதிக்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அந்த பெண் போலீஸில் புகார்  கூறினார்.




காலையில் ஒரு இசை வகுப்பில் கலந்துகொள்ளச் சென்றுகொண்டிருந்த போது வெள்ளை நிற வேனில் வந்த இருவர் வழி கேட்டதாக அவர் கூறினார். பின்னர் அந்த நபர்கள் தன்னை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் சென்று முகத்தை துணியால் மூடி,  ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக  கூறினார்.


இந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த மாநகர போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர். கலம்னா போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார், கூடுதல் சிபி சுனில் புலாரி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வழக்கு விசாரணைக்காக சீதாபுல்டி போலீஸ் நிலையத்திற்கு விரைந்தனர். குமார், 1,000க்கும் மேற்பட்ட காவல்துறையினரைக் கொண்ட 40 சிறப்புக் குழுக்களை அமைத்து, நகரத்தில் உள்ள சிசிடிவிகள், வேன்களின் காட்சிகளை சரிபார்க்கவும், மருத்துவப் பரிசோதனைக்காக மாயோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பெண்ணின் நண்பர்களை விசாரிக்கவும் உத்தரவிட்டார்.


ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர முயற்சிகள் மற்றும் 50க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சொன்னது பொய் என்று போலீசார் முடிவு செய்தனர்.


நாக்பூரில் உள்ள வெரைட்டி சதுக்கத்தில் காலை 9:50 மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கிய பெண், 10 மணிக்கு ஜான்சி ராணி சதுக்கத்திற்கு நடந்து சென்று, 10 மணிக்கு ஆனந்த் டாக்கீஸ் சதுக்கத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் ஏறியது சிசிடிவியில் தெரிய வந்தது. 10:25 க்கு மயோ மருத்துவமனையில் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் ஷேர் ஆட்டோவில் ஏறி 10:54 மணிக்கு சிகாலி சதுக்கத்தில் இறங்கினார்.


பெட்ரோல் பம்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அவர் காலை 11:04 மணியளவில் கலம்னா காவல் நிலையத்தை நோக்கி நடந்து செல்வது பதிவானது.


உண்மை தெரிந்த பின்பு, அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்து, நீங்கள் கூறியது பொய்தானே என்று கேட்டனர். அப்போது அந்த பெண், தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக தான் இந்த செயலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதனைக் கேட்ட போலீசார் அதிர்ச்சியில் மூழ்கினர்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண