நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதும் இலங்கையில் இருந்து வேதாரண்யத்திற்கு தங்கம் கடத்துவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று, வருகிறது. அவ்வப்போது

தங்கம் மற்றும் கஞ்சா பிடிபடுவது வழக்கம்.  இந்த நிலையில் வேதாரண்யம் வந்தால் இலங்கையில் இருந்து வரும் கடத்தல் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்று பலர் வந்து, ஏமாந்து செல்வதாக சமீபத்தில் பரவலாக பேச்சு எழுந்தது.

இது குறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக , தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் என்பவர் அங்கு பிரபல நகைக்கடை வைத்துள்ளார். இவருக்கும் சின்னசேலத்தைச் சேர்ந்த தியாகு என்பவருக்கும் வியாபார ரீதியாக பழக்கம் இருந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன் வந்த அட்சய திரிதியைக்கு, குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக தியாகு கூறியுள்ளார். கிராமிற்கு ரூ. 400 குறைவாக தங்கம் கிடைப்பதாக கூறியதால், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் அதை நம்பி,  வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்த பண்டேரிநாதன் (65) என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசி 2 கிலோ தங்கம் வாங்க ஏற்பாடு செய்து உள்ளார். 

 

 

2 கிலோ தங்கம் வாங்க 96 லட்சம் ரூபாய் பணத்துடன்  கருப்பம்புலத்திற்கு முருகன் வந்துள்ளார். அப்போது பண்டேரிநாதன் அவரிடம் 850 கிராம் எடைக்கொண்ட தங்கத்தை கொடுத்து விட்டு பாக்கியை நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என அனுப்பி விட்டாராம்.

 இதை பெற்றுக் கொண்ட முருகன் தான் அழைத்து வந்த நபரிடம் 850 கிராம் நகையை கொடுத்து விட்டு, அங்கிருந்து முருகன் சென்றுள்ளார். முருகனிடம் தங்கம் இல்லை என்பதை அறியாத பண்டேரிநாதன், தனது ஆட்களை அனுப்பி முருகனை வழிமறித்து மிரட்டி, தாக்கி, அவரிடம் தங்கத்தை பறிக் முயன்றுள்ளார். ஆனால், அவரிடம் தங்கம் இல்லாததால், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு, அவரை தாக்கிவிட்டு அந்த கும்பம் தப்பியுள்ளது. 

படுகாயம் அடைந்த முருகன், வேதாரண்யம் போலீசாரிடம் இது குறித்து புகார்  செய்துள்ளார்.  புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் டி.எஸ்.பி முருகவேல், இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கினர். இந்த மோசடியில் தொடர்புடைய கருப்பம்புலத்தைச் சோ்ந்த பண்டேரிநாதன் (65), கார் டிரைவா் திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ் (29), சென்னையைச்  சேர்ந்த பாலகுமார் (32), திருத்துறைப்பூண்டி எழிலுரைச் சேர்ந்த துர்க்காதேவி (42), கருப்பம்புலம் செல்லத்துரை (43), வடமழை மணக்காடு, தனுஷ்கொடி (32), திருத்துறைப்பூண்டி மணிமாறன் (25) ஆகியோரை கைது செய்தனர். 

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரையும் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து இரண்டு கார், ஒருஇருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.