நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துக்குமாருக்கு (53) 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.  இந்த நிலையில் இவரது மகள் பாப்பா (18) பிளஸ் 2 முடித்து விட்டு பொன்னாக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார். இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை பாப்பாவின் தந்தை  முத்துக்குமார் மிகவும் சிரமப்பட்டு  இரண்டு தவணைகளாக செலுத்தி உள்ளார். கூலி தொழில் செய்வதால் அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை கவனிப்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் அவர் சம்பாதித்த தொகையை மகளின் படிப்பிற்காக செலவழித்து விட்டு குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.  இதற்கிடையில் தனது படிப்பிற்கு இருந்த பணத்தை செலவழித்து விட்டு பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு வருவதை எண்ணி மாணவி பாப்பா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.




இந்த நிலையில் நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பாப்பா கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தன்னுடைய துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும், அவரது மனைவியும் கதவை தட்டிப்பார்த்தும் திறக்காத  நிலையில் கதவை சிரமப்பட்டு திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு கதறி அழுதனர்.




மாணவியை கீழே இறக்கி பார்த்தப்போது அவர் உயிரிழந்து விட்டது தெரிய வந்துள்ளது. இது பற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் பாப்பாவின் உடமைகளை சோதனையிட்டு பார்த்த போது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று காவல்துறையிடம் சிக்கியது. 




அதில், எனக்காக மற்றவர்கள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை, எனக்கு காலேஜ் fees கட்ட அம்மா அப்பா சிரமப்படுறாங்க. இப்போ கூட fees கட்ட தான் போய்ருக்காங்க. மத்தவங்கள கஷ்டப்படுத்த கூடாதுனு தான் இந்த முடிவு. என் சாவுல மர்மம் இருக்க கூடாதுனு தான் இந்த லெட்டர். வேறு எதுவும் காரணம் இல்லை என அவர் உருக்கமாக எழுதியிருந்தார். அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் இந்த தற்கொலை முடிவை எடுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060