கன்னியாகுமரியில் 3 நாட்களுக்கு முன்பு நடந்த கொலை - கொலையாளியை கண்டுபிடிக்க திணறும் போலீசார்

மேலும் கொலை செய்யப் பட்ட வர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் கொலை நடந்து 3 நாட்கள் ஆனபிறகும் துப்பு துலங்கவில்லை

Continues below advertisement
கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் மூன்று நாட்களுக்கு முன்னர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கொலை நடந்த பகுதியில் மோப்பம் பிடித்த நாய் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. மேலும் கொலை நடந்த இடத்தில் கைரேகைகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்று தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். 
 

 
அதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட அந்த வாலிபரின் கழுத்து பயங்கர ஆயுதத்தால் அறுக்கப்பட்டு ரத்தம் உறைந்த நிலையில் இருந்ததால் முந்தின நாள் இரவிலேயே கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் கொலை நடந்து 3 நாட்கள் ஆனபிறகும் துப்பு துலங்கவில்லை. மதுபோதை தகராறில் அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தேர்தல் தகராறில் இந்த கொலை நடந்துள்ளதா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 
முதலில் கொலை செய்யப்பட்டவர் யார்? என்று அடையாளம் தெரிந்த பிறகுதான் கொலைக்கான பின்னணி என்ன? கொலையில் ஈடுபட்ட கும்பல் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த யாரையாவது அங்கு வைத்து கொலை செய்து காரில் பிணத்தை கடத்தி கொண்டு வந்து கன்னியாகுமரி ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் உள்ள தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இதே நான்கு வழி சாலையில் கஞ்சா போதையில் இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்தது.  இந்த நிலையில் மீண்டும் ஆள் நடமாட்டம் இல்லாத நான்கு வழி சாலை பகுதியில் இந்த கொலை நடந்ததால் அதே மாதிரியான போதை தகராறில் கும்பல் கொலை வெறியில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

 
இதற்கிடையில் குமரி மாவட்டம் மற்றும் பக்கத்தில் உள்ள நெல்லை மாவட்டம் போன்ற இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க அமைக்கப்பட்டு உள்ள 2 தனிப்படை போலீசாரும் வெளிமாவட்டங்களுக்கு சென்று இந்த கொலையை பற்றி துப்பு துலக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Continues below advertisement
Sponsored Links by Taboola