மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த புதன்கிழமை அன்று போபாலில் உள்ளி மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நீண்ட நாட்களாக வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த அந்த அதிகாரியின் பெயர்  மோஹித் பண்டாஸ் தற்போது வனத்துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் போலீஸ் கமிஷனர் சச்சின் அதுல்கர்  இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், மோஹித் பண்டாஸ், அவரது தாய் மற்றும் சகோதரி மீது செவ்வாய்க்கிழமை இரவு வரதட்சணை கொடுமை மற்றும் தாக்குதலுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் அதிகாரி மீது ஐபிசியின் பிரிவுகள் 498A (ஒரு பெண்ணின் கணவன் அல்லது கணவனின் உறவினர் பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.




தற்போது ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக இருக்கும் மோஹித் பண்டாஸும் அவரது மனைவியும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருப்பதாக கூறப்படுகிறது.  காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் மோஹித் பண்டாஸின் மனைவிக்கும் அவரது தாயருக்கும் சில  பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல மோஹித்தின் சகோதரருக்கும் மனைவிக்கும் இடையிலும் சில பிரச்சினைகள் இருந்திருக்கிறது. மேலும் தன்னை தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய பெண் , இதுவரையில் காவல்துறையினர் ஒருவரையும் கைது செய்யவில்லை என தெரிவித்துள்ளார். வரதட்சணை தடுப்பு சட்டம் பிரிவு 498 ஏ -இன் கீழ்  குற்றம் சாட்டப்பட்ட கணவன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் . குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் . அரசு அதிகாரியாக இருந்தால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த வரதட்சணை சட்டத்தை  பெண்கள் சிலர் பிடிக்காத குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேற பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்திருந்ததும் நினைவுக்கூறத்தக்கது.