மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே தனியார் பள்ளி ஒன்றின் முன்பு, காரில் சென்று கொண்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தமிழ்நாடு அரசு கொலைக்கு காரணமான கூலிப்படைகளை விரைந்து கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழ்வுரிமைக் கட்சி கூட்டம்

இன்று மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர் நியமன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு காரைக்கால் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறனும் கலந்துகொண்டார். இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டப் பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருவதாக கூறப்படுகிறது.

பள்ளிக்கூட வாசலில் நடந்த கொலை

கூட்டம் முடிந்த பின்னர், மணிமாறன் தனது காரில் காரைக்காலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாயிலின் அருகே, இரண்டு கார்களில் வந்த அடையாளம் தெரியாத ஏழு பேர் கொண்ட கும்பல் அவரது காரை வழிமறித்தது. எதிர்பாராத இந்தத் தாக்குதலில் அதிர்ச்சியடைந்த மணிமாறனை, அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த கொடூரத் தாக்குதலில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல் துறையின்  விசாரணை

இந்த கொடூரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர் நேரில் சென்று முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினார். சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்த தடயங்களைச் சேகரித்து, அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்தார். மணிமாறனின் உடல் உடனடியாக உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தக் கொலைக்கான காரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேவமணி கொலை வழக்கில் மணிமாறன் முதல் குற்றவாளி என்பதால், அந்தக் கொலையின் பின்னணியில் பழிவாங்கும் நடவடிக்கை இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மணிமாறனின் தனிப்பட்ட விரோதங்கள் அல்லது கட்சி ரீதியான பிரச்சனைகள் ஏதேனும் உள்ளதா! என்பது குறித்தும் காவல் துறையினர் துருவி வருகின்றனர். இந்தக் கொலையில் ஈடுபட்ட கும்பல் யார், அவர்களுக்கு யார் பின்னணி என்பதும் குறித்துப் பன்னிற்று காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

மயிலாடுதுறையில் பதற்றம்

இந்த பட்டப்பகல் படுகொலை சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிக்கு அருகே ஒரு அரசியல் கட்சி நிர்வாகி வெட்டி கொல்லப்பட்டிருப்பது, சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்

காவல் துறையினர் ஐந்து தனிப் படைகளை அமைத்து, கொலையாளிகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளின் அடையாளங்களைத் துப்பு துலக்கி வருகின்றனர். மேலும், மணிமாறனின் தொடர்புகள் குறித்து விசாரித்து, கொலையின் பின்னணியில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். மேலும் இந்தக் கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

வேல்முருகன் விடுத்த இரங்கல் செய்தி 

இந்த கொலை தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த மணிமாறன் அவர்களை படுகொலை செய்த கூலிப்படையை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உள்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனு அளிக்கும் நிகழ்வு இன்று (04.07.2025) மயிலாடுதுறையில் நடைபெற்றது. மணிமாறன் அவர்கள் இதில் பங்கேற்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தார்.  

 

பின்னர்,மணிமாறன் தனது காரில் காரைக்கால் சென்று கொண்டிருந்தார். அப்போது, செம்பனார் கோயில் பகுதியில் காரை வழிமறித்த கூலிப்படை, மணிமாறனை சரமாரியாக வெட்டியுள்ளது இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார்.

 

மணிமாறனின் மறைவுக்கு காரணமான, கூலிப்படையை விரைந்து கைது செய்து, அக்கும்பலுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. 

 

மணிமாறன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டிருந்தது.