மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்தவர் ரவி என்பவரின் மகன் 31 வயதான கண்ணன். ஆம்புலன்ஸ் வைத்து தொழில் செய்து வருகிறார்.  இவர் மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவருக்கும் கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹோட்டலில்  சாப்பிட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார். இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.




மேலும் இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதால் தொடர்ந்து கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுதலை ஆகி வெளியில் வந்துள்ளார். இந்நிலையில்  நள்ளிரவு  கண்ணன்  நல்லத்துக்குடியை சேர்ந்த அவரது நண்பர்களான 19 வயது  ரஞ்சித் மற்றும் மயிலாடுதுறை டபீர் தெருவை சேர்ந்த 22 வயதான திவாகர்  ஆகியோருடன் இரண்டு இரு சக்கர வாகனத்தில் மயிலாடுதுறை கடைவீதியில் பீடா வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை வழிமறித்த  கலைஞர் காலனியை சேர்ந்த அஜித், திவாகர், கதிரவன் மற்றும் சிலர் வாக்குவாதத்தில்  ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதை பார்த்து கண்ணனுடன் வந்த  ரஞ்சித் மற்றும் திவாகர் தப்பி ஓடியுள்ளனர்.




அதனை அடுத்து அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து  தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து தலை, மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி  ஓடியுள்ளனர். இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் உயிரிழந்த கண்ணனின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, அதனடிப்படையில் கொலை வழக்காக பதிவு செய்தனர். இக்கொலையில் ஈடுபட்ட அஜித், திவாகர், கதிரவன் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய கும்பலை தேடி வந்த நிலையில் படுகொலையில் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




மயிலாடுதுறை டிஎஸ்பி. வசந்த் ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட  கதிரவன், சேது, சந்தோஷ், ரஞ்சித், முருகவேல், கார்த்திக், துரை, குணசேகரன்,  பிரபாகரன் ஆகிய 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஞ்சிய நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். இந்நிலையில் கொலை  நடந்த போது  கண்ணனுடன் வந்த டபீர் தெரு திவாகரை காவல்துறையினர் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, மேலும் மோதல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண