சீர்காழி, ஜூலை 29: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள திருவெண்காடு - மங்கைமடம் பிரதான சாலையோரத்திலும், மணிகரனையாற்றின் கரையோரத்திலும் உள்ள குளம் மற்றும் வயல்வெளி கழிவுகளின் முனையமாக மாறியுள்ளது. திருவெண்காடு மற்றும் மங்கைமடம் ஆகிய இரு ஊராட்சிகளிலும் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்தக் குப்பைகளும் இங்குதான் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி நிர்வாகங்களின் இந்தச் செயலால், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள்

ஊராட்சி நிர்வாகங்கள் குப்பைகளைக் கொட்டுவதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிலர், ஆபத்தான மருத்துவக் கழிவுகளையும் இறைச்சிக் கழிவுகளையும் மூட்டை மூட்டையாக இரவோடு இரவாக இங்கு கொண்டுவந்து கொட்டிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் தாங்க முடியாத துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், அன்றாடம் இந்தச் சாலையைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விவசாய நிலங்கள் பாதிப்பு

காற்றின் வேகம் காரணமாக, கரையோரம் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் அடித்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள விளைநிலங்களில் போய் விழுகின்றன. இதனால் மண் வளம் பாதிக்கப்பட்டு, விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

புகைமூட்டத்தால் தொடரும் விபத்துகள்

இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாகச் மறுசுழற்சி செய்யாமல், அவ்வப்போது தீவைத்து எரிப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையிலும் குப்பைகளுக்கு யாரோ தீ வைத்துள்ளதால், அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்குப் புகை மறைப்பதால், அடிக்கடி  விபத்துகள் நேரிடுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காற்றை மாசுபடுத்தும் இச்செயலால் வாகன ஓட்டிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இந்தச் சாலையைக் கடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

"உலகப் புகழ்பெற்ற புதன் ஸ்தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலுக்கு  தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்த அருவருப்பான  கழிவுகளையும் சகிக்க முடியாத துர்நாற்றத்தையும் கடந்தே செல்ல வேண்டியுள்ளதாக  உள்ளூர் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கும் பெண்மணிக்கும் பாதிப்பு

இன்று ஏற்பட்ட கடும் புகைமூட்டம் காரணமாக, அவ்வழியாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், வழக்கம் போல வீசிய நெடி மற்றும் புகை காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்குத் திடீரெனக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பொதுமக்கள் வைக்கும் முக்கியக் கோரிக்கைகள்

குளத்தை மீட்டெடுத்தல்: சாலையோரத்திலும் ஆற்றங்கரையிலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக முழுமையாக அகற்றி, ஆக்கிரமிப்பிலும் மாசுபாட்டிலும் சிக்கியுள்ள கிராமக் குளத்தை தூய்மைப்படுத்தி மீட்டெடுக்க வேண்டும்.

கடுமையான நடவடிக்கை: சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் மருத்துவக் கழிவுகளையும் இறைச்சிக் கழிவுகளையும் மூட்டை மூட்டையாகக் கொட்டும் தனிநபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்று இடம் அமைத்தல்: ஊராட்சிகளின் குப்பைகளைக் கொட்டுவதற்குப் பதிலாக, உரிய கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தி மக்காமக்காத குப்பைகளைப் பிரித்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்பகுதி மக்களின் சுகாதாரத்தையும், புதன் ஸ்தலத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.