புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. தூய்மைப் பணியாளரான இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, இவரது இளைய மகள் உமாமகேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் 2020-ஆம் ஆண்டு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.


காதல் திருமணம்:


இதனால், உமாமகேஸ்வரி மயிலாடுதுறை ஆராயத்தெரு அருகில் உள்ள குருக்கள் பண்டாரத்தெருவில் வாடகை வீட்டில் தனது தாய் தனலெட்சுமியுடன் தங்கி பணியாற்றி வந்தார். இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகா பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (தந்தை, கணவர் இருவரின் பெயரும் மாரிமுத்து) என்பவரை காதலித்து வந்த உமாமகேஸ்வரி, கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி தனது தாயின் விருப்பத்துக்கு மாறாக வீட்டைவிட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.




மனைவியை கடத்திய கணவன்:


பின்னர் கணவருடன் மயிலாடுதுறையில் தனி வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான நான்கே மாதத்தில் தாய் தனலெட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உமாமகேஸ்வரி, தனது கணவர் மாரிமுத்து சைக்கோ போல தன்மீது சந்தேகப்படுவதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு சென்ற உறவினர்கள் உமாமகேஸ்வரியை அவரது கணவர் மாரிமுத்துவிடம் இருந்து பிரித்து அழைத்துவந்து தாய் தனலெட்சுமியிடம் ஒப்படைத்தனர்.


அப்போது, வீட்டைவிட்டு போகிறாயா? நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் என பார்க்கிறேன் என மாரிமுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவு 7 மணியளவில் காரில் சில நபர்களுடன் வந்த மாரிமுத்து,  ஆராயத்தெரு என்ற இடத்தில் தாயாருடன் சாலையில் நடந்துசென்ற உமாமகேஸ்வரியை வழிமறித்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். 




இதுகுறித்து, தனலெட்சுமி அன்றிரவே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து சுமார் ஒருமாதமாகும் நிலையில், இதுவரை தனது மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.  இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையம் அழைத்து வந்தனர்.




நடுரோட்டில் விட்டுச்சென்ற பரிதாபம்:


இந்நிலையில், போலீசாருக்கு வாக்குமூலம் அளித்த உமாமகேஸ்வரி, தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, குளோரோபார்ம் கொடுத்து மயக்கமடைய செய்ததாகவும், தொடாந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்ததாகவும், பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்ததாகவும், பின்னர் கணவனுடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.