Mayiladuthurai Kidnap Case: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் என்பவரின் 34 வயதான  மகன் விக்னேஸ்வரன். இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். அதன்பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். 




ஆனால், அதன்பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் 2 முறை புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து பேசி இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.




இந்த சூழலில் கடந்த ஜூலை 12 -ஆம் தேதி அப்பெண்ணை கடத்த விக்னேஸ்வரன் முயற்சித்துள்ளார். அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் இதுகுறித்தும் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.  




இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நேற்று இரவு, ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15 க்கும் மேற்பட்டோர், அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக  தூக்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, வீட்டில் இருந்த  சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடிச் சென்றனர். கடத்தல் சம்பவத்தையடுத்து தமிழகம்  முழுவதும் உள்ள காவல்நிலையங்களில்  உஷார் படுத்தினர். 




அதனைத் தொடர்ந்து, இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாகனத்தை விழுப்புரம் அருகே விக்கிரவண்டி டோல்கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மடக்கி பிடித்து, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். மேலும் கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் அவரது கூட்டாளிகள் மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விழுப்புரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து, மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட தலைமறைவாக உள்ள சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். வீடு புகுந்து வலுக்கட்டாயமாக இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.






 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண