Just In





கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்த விவகாரத்தைவிட, மயிலாடுதுறை முட்டத்தில் நடந்த மரணங்கள் கொடூரமானது - சாட்டை துரைமுருகன்
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்த விவகாரத்தைவிட, மயிலாடுதுறை முட்டத்தில் நடந்த மரணங்கள் கொடூரமானது என சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்த விவகாரத்தைவிட, மயிலாடுதுறை முட்டத்தில் நடந்த மரணங்கள் கொடூரமானது என்பதால் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என மயிலாடுதுறை அருகே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கொலையான இளைஞர்களின் உறவினர்களிடம் ஆறுதல்
மயிலாடுதுறையில் கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி இரவு சாராய விற்பனையை தட்டிக்கேட்டதற்காக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஹரீஸ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரது குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் மற்றும் கொள்கைபரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் கூறியதாவது;

காவல்துறையினரின் அலட்சியத்தால் கொலை
காவல்துறை உரிய நேரத்தில் செயல்பட்டிருந்தால் இந்த கொலை நடந்திருக்காது. உண்மை குற்றவாளிகளை மறைக்கும் நோக்கத்துடன் காவல்துறை செயல்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டினார்.
சாட்டை துரைமுருகன்
அவரை தொடர்ந்து பேசிய நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கூறுகையில், இந்த வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் செய்ய வேண்டிய சாராய விற்பனையை தடுக்க வேண்டிய வேலையினை உயிரிழந்த இந்த இரண்டு இளைஞர்களும் செய்துள்ளனர்.
வழக்கை மடைமாற்றம் செய்த காவல்துறை
இப்பகுதியில் நடைபெறும் சாராய வியாபாரம் குறித்து 8 புகார்கள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால்கூட இந்த கொலைகள் நடந்திருக்காது. பிப்ரவரி 11 -ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராஜ்குமார் பிப்ரவரி 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளிவந்த நிலையில், அன்றிரவு 7 மணிக்கு இந்த கொலைகள் நடந்துள்ளன. கொலைக்கு முக்கிய உடந்தையாக இருந்த மஞ்சுளா, கார்த்திகா ஆகிய இரண்டு பெண்கள் மீது இதுவரை எப்ஐஆர் போடப்படவில்லை. அவர்கள்தான் இவர்களை கொலை செய்ய சொல்லி தூண்டியதாக கொலையை நேரில் பார்த்த ஹரிசக்தியின் சகோதாரர் கூறியுள்ள நிலையில், கொலைக்கான காரணம் முன்விரோதம்தான் என காவல்துறையினர் மடைமாற்றம் செய்வதற்கான காரணம் என்ன?
கண்டுக் கொள்ளாத திமுக
போலீஸார் கண்துடைப்புக்காக வழக்குகளை போட்டு, உடனடியாக சாராய வியாபாரிகளை விடுவித்து விடுகின்றனர். இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இரண்டு உயிர்கள் போயிருக்காது. இது தமிழக காவல்துறை, தமிழக அரசின் தோல்வி. எனவே, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் உள்பட அனைவரின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கிராமத்தில் 30 பேர் இதுவரை சாராய வியாபாரிகளால் தாக்கப்பட்டுள்ளனர். பரம்பரையாக திமுகவுக்கு வாக்களிக்கக் கூடிய மக்கள் வசிக்கக் கூடிய இந்த கிராமத்தில் நடைபெற்ற மரணத்தை ஏன் இதுவரை எந்த திமுகவினரும் கண்டுகொள்ளவில்லை.
ஒரு கோடி ரூபாய் இழப்பீடு
சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். இரண்டு இளைஞர்களின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.