தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


தருமபுரம் ஆதீனம் ஆபாச வீடியோ மிரட்டல்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார்.  இந்நிலையில் இவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த நான்கு பேரை கைது செய்துள்ள காவல் துறையினர், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், திமுகவின் செம்பனார்கோயில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார்,  உள்ளிட்ட ஒன்பது பேர் மீது மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 




காவல்துறையில் புகார்


தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும், மடாதிபதியின் உதவியாளராகவும் இருக்கும் விருத்தகிரி அளித்துள்ள புகாரில், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள். மேலும் தங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவர் தொடர்பு கொள்வார் என்றும் தெரிவித்தனர். 




9 போ் மீது வழக்கு பதிவு


இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் மற்றும் திமுக செம்பனார்கோயில் ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்றும் புகார் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மிரட்டல் விடுத்த சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து  ஆடுதுறை வினோத் , திருவெண்காடு ரவுடி விக்னேஷ் , கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,  உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீநிவாஸ் ஆகியோரை கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.




பாஜக மாவட்ட தலைவர் கைது


இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட மேலும்  5 பேரை மயிலாடுதுறை தனிப்பட்ட காவல்துறையினர் தேடி வந்த நிலையில், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மும்பையில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  மயிலாடுதுறை குழந்தைகள் தடுப்பு குற்றபுலனாய்வு காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் 8 பேர் அடங்கிய குழுவினர் மகாராஸ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததனர். தொடர்ந்து  அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர் விமானம் மூலம் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை அழைத்து வந்து. இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.  இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.