கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


கேரள மாநிலம் ஆலப்புழா ரயில் நிலையத்தில் இருந்து கண்ணூர் வரை செல்லும் ரயில் வழக்கம்போல நேற்று மதியம் 2.55 மணியளவில் புறப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனிடையே  இரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு சென்ற நிலையில் டி1 பெட்டியில் அடையாளம் தெரியாத நபர் ஏறியுள்ளார். அங்கிருந்து ரயில் புறப்பட்டு கோரபுழா ரயில்வே பாலத்தை கடந்த போது அந்த நபர் ரயிலில் பயணித்த பயணிகள் மீது திரவம் ஒன்றை ஊற்றி தீ வைத்துள்ளார். 


இதனைக் கண்டு அலறிய பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி கீழே இறங்கினார். ஆனால் அதற்குள் தீ ரயில் பெட்டிகளில் பரவியதால் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில் ரயிலில் பயணித்த பயணிகள் விபரங்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை, ஒரு பெண், ஆண் ஆகிய 3 பேரை காணவில்லை என தெரிய வந்தது. உடனடியாக ரயில் வந்த பாதையில் தேடுதல் வேட்டை நடந்தது. இதில் பெண்ணின் காலணி மற்றும் செல்ஃபோன் ஆகியவை கண்டெடுக்கப்பட்ட நிலையில் சிறிது தூரத்தில் 3 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டது. 


இவர்கள் ரயிலில் இருந்து தீ விபத்தை கண்டதும் தங்களை காப்பாற்றிக் கொள்ள குதித்தார்களா அல்லது தவறி விழுந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் நபர், கோரபுழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் ரயில் நின்றவுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர், ஆற்றுப் பகுதியில் குதித்து அவருக்க காத்திருந்த பைக்கில் ஏறி தப்பிச் சென்றார் என தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள வீட்டின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொலையாளியின் காட்சிகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ம்