பிரிந்த வாழ்ந்து வரும் தன் மனைவியை தன் 5 வயது குழந்தை சந்திப்பதைத் தடுக்க தந்தை சிகரெட்டால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரில் வசித்து வரும் ஃபஹிம் ரிஸ்வான் அகமது கான் (33)  எனும் நபரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தந்தையுடன் வசிக்கும் இந்த 5 வயது குழந்தை அவ்வப்போது தன் தாயை பார்த்து வந்துள்ளார்.


இந்நிலையில் குழந்தை தன் தாயை சந்திப்பது பிடிக்காத அந்நபர் குழந்தைக்கு சிகரெட்டால் சூடு வைத்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து முன்னதாக பிரிந்து வாழும் இந்நபரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில்,  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.


மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் குழந்தை தனது தாயைப் பார்க்க செல்வதைத் தடுக்க பலமுறை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


முன்னதாக இதேபோல் படுக்கையில் சிறுநீர் கழித்த தன் வளர்ப்பு மகளுக்கு தாய் பிறப்புறுப்பில் சூடுவைத்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தனது உறவுக்காரக் குழந்தையான இச்சிறுமியை 40 வயது மதிக்கத்தக்க அப்பெண் தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில், அக்கம்பக்கத்தார், உறவுக்காரர்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் முன்னதாக சிறுமியை அப்பெண்ணிடமிருந்து மீட்டுள்ளனர்.


இச்சம்பவத்தில் இதுவரை வளர்ப்புத் தாய் கைது செய்யப்படாத நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 294 (துஷ்பிரயோகம்), 323 (கடுமையாகக் கையாளுதல்), 324 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 506 (அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும்,  சிறுமி குறித்து முன்னதாகப் பேசிய குழந்தைகள் நலக் குழுவின் (CWC) தலைவர் பல்லவி போர்வால், சிறுமியின் பிறப்புறுப்புகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தலையில் சில முடிகள் பிடுங்கப்பட்டுள்ளதாகவும், உடலில் நகக் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


குழந்தையின் நிலையைப் பார்க்கும்போது, ​​வளர்ப்புத் தாய் வக்கிர மனப்பான்மையுடன் சிறுமியைக் கையாண்டுள்ளதாகவும், சிறுமியின் நிலையைக் கருத்தில் வளர்ப்புத் தாயின் மீது போக்சோ வழக்கையும் பதிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண