மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர்பாண்டி, விவசாய கூலி தொழிலாளியான இவரது தந்தை அய்யங்காளை இவர்களது கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த குல தெய்வ கோவிலில் பக்தர்கள் அடிக்கடி நேர்த்திக்கடனுக்காக கிடா வெட்டி பூஜைகள் செய்வது வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

ஆட்டுத் தலையால் பரபரப்பு:


அவ்வாறு கிடா வெட்டி பூஜை செய்யும் போது வெட்டப்படும் ஆட்டின் தலை மற்றும் கால்கள் கோவிலின் பூசாரிக்கு காணிக்கையாக வழங்கப்படுவது ஆதிகாலம் முதல் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி இந்த கோவிலில் சில பக்தர்கள் கிடா வெட்டி பூஜைகள் செய்த போது ஆட்டின் தலை மற்றும் கால்களை பூசாரி அய்யங்காளை வெளியே சென்றிருந்தால் அவரது தம்பியான பெரியகருப்பனிடம் கொடுத்தாக கூறப்படுகிறது.



 

பூசாரிக்கு கொடுக்கப்படும் காணிக்கையை அவரது தம்பியிடம் கொடுத்தது குறித்து பூசாரி அய்யங்காளையின் மகனான அய்யர்பாண்டி என்பவர் தனது சித்தப்பாவிடம் இருவரும் இணைந்து மது அருந்தி கொண்டிருந்த போது முறையிட்டு சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையை அக்கம் பக்கத்தினர் விலகி விட்ட நிலையில் இந்த பிரச்சனையால் ஆத்திரமடைந்த பெரியகருப்பன், தனது அண்ணன் மகனான அய்யர்பாண்டியை அவர் தோட்டத்து பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிச் சென்றார்.



 

குத்திக்கொலை:


இதில் தலை,  உடல் உள்ளிட்ட 5 இடங்களில் காயம் ஏற்பட்டு பலத்த காயமடைந்த அய்யர்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே அய்யர்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த எழுமலை காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பெரிய கருப்பனை தேடி வந்தனர்.

 

இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள தனது மகள் வீட்டில் பதுங்கி இருந்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த பெரியகருப்பனை வரும் வழியிலேயே போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிடா வெட்டின் போது ஆட்டின் தலைக்காக அண்ணன் மகனை சித்தப்பா கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.