புதுச்சேரியில் லோன் ஆப் மோசடி மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் பெயரில் மிரட்டிப் பணம் பறிப்பு, இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement


லோன் ஆப் மோசடி


புதுச்சேரியில் லோன் செயலிகள் (Loan Apps) மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை குறிவைத்து பெரிய அளவில் நிதி மோசடிகள் அரங்கேறி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


லோன் ஆப் மூலம் மிரட்டிப் பணம் பறிப்பு: 


குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும், பொதுமக்களின் புகைப்படங்களைப் 'மார்பிங்' (Morphing) செய்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகள் அரங்கேறியுள்ளன.


இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் லோன் ஆப் மூலம் வாங்கிய கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளார். இருப்பினும், மோசடி கும்பல் அவரிடம் கூடுதல் தொகையைக் கேட்டு மிரட்டி, அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். இதன் மூலம் அவரிடம் இருந்து ரூ.2.8 லட்சம் அபகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற சம்பவம் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் நடந்துள்ளது. இவர் லோன் ஆப் மூலம் ரூ.7 ஆயிரம் கடன் பெற்று, அதனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தியுள்ளார். ஆனாலும், மோசடி கும்பல் மிரட்டி, மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பி இவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் வரை பறித்துள்ளனர். மேலும், லிங்காரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் இதே முறையில் மிரட்டி, மோசடி கும்பல் ரூ.62 ஆயிரம் சுருட்டியுள்ளனர்.


ஆன்லைன் ஷாப்பிங் பெயரில் நூதன மோசடி


லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி, ரூ.734 மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.


மோசடி முறை:


 பொருட்களைப் பெறும் சமயத்தில், மோசடி கும்பல் "முகவரி அப்டேட்" செய்ய வேண்டும் என்று கூறி, அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளனர். இந்த நூதன மோசடி மூலம் அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பறிக்கப்பட்டுள்ளது.


சைபர் கிரைம் நடவடிக்கை


இந்த தொடர்ச்சியான மோசடி சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார்களின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இந்த மோசடி கும்பலைக் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் இது போன்ற லோன் செயலிகள் மற்றும் சந்தேகத்துக்குரிய ஆன்லைன் விளம்பரங்களில் பணப்பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மிரட்டல்கள் வந்தால் உடனடியாகக் காவல்துறையை அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.