இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டு விமானத்தில் சென்னை திரும்பி, பெங்களூரு செல்லவிருந்த கா்நாடகா மாநிலத்தை சோ்ந்த ஒரு குடும்பத்தில் 5 வயது பெண் குழந்தையின் கைப்பையிலிருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா துபே (64). இவர் மத்திய அரசின் சென்ட்ரல் எக்சைஸ் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

 

கிருஷ்ணா துபே  கடந்த சில தினங்களுக்கு குடும்பத்தினா் 5 போ்களுடன் இஸ்ரேல் நாட்டிற்கு  சுற்றுலா சென்றுவிட்டு அதன் பின்பு சுற்றுலாவை முடித்துவிட்டு இஸ்ரேல் நாட்டிலிருந்து துபாய் வந்து, அங்கிருந்து  கடந்த ஞாயிறு அதிகாலை 4:30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள்  விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு சென்னையிலிருந்து உள்நாட்டு விமானத்தில் பெங்களூரு செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு இண்டிகோ ஏா்லைன்ஸ்  விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு சோதனை நடத்தினா். அப்போது கிருஷ்ணா துபேவின் 5 வயது பேத்தியின் கைப்பையில் இருந்து வெடிகுண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. 

 

இதை அடுத்து  அதிர்ச்சி அடைந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கிருஷ்ண  துபேயின் குடும்பத்தினரை நிறுத்தி, அந்த ஐந்து வயசு பெண் குழந்தை வைத்திருந்த கைப்பை தனியே எடுத்து வைத்து பாதுகாப்பாக பிரித்து பார்த்தப்போது வெடிக்காத ஒரு துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த குண்டை பறிமுதல் செய்து கிருஷ்ணா துபேயின் குடும்பத்தினரின் விமான  பயணங்களையும் ரத்து செய்தனா்.

 

அதன்பின்பு மேல் நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனா். அங்கு போலீசாா் விசாரணை நடத்திய போது, தாங்கள் இஸ்ரேல் நாட்டின் சுற்றுப்பயணம் செய்யும் போது, அங்கு கடற்கரை மணலில் இந்த பொருள் கிடந்தது. அது துப்பாக்கி குண்டு என்று தெரியாமல் எடுத்து குழந்தைக்கு விளையாட கொடுத்திருந்தோம் என்று கூறினா். 

 

போலீசாா் குண்டை ஆய்வு செய்தபோது அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும், பெரிய துப்பாக்கிகளில் போட்டு வெடிக்கக்கூடிய "9 mm" ரகம் என்றும் தெரிந்தது. இதையடுத்து குண்டை போலீசாா் பறிமுதல் செய்தனா். அதோடு அவா்களை எச்சரித்து, எழுதி வாங்கிக்கொண்டு, பெங்களூருக்கு அனுப்பி வைத்தனா். அவா்கள் மீது வழக்குகள் எதுவும் பதியாமல் அனுப்பி வைத்ததால் அது பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஆனால் தற்போது இந்த தகவல் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் சுதந்திரதின பாதுகாப்பாக,கடந்த சனி,ஞாயிறு தினங்களில் 7 அடுக்கு பாதுகாப்பான உச்சகட்ட பாதுகாப்பு இருந்த நிலையிலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பையும்,சா்ச்சையையும் உருவாக்கி உள்ளது.