கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இப்போது திறந்து விடுவார்கள், அப்போது திறந்து விடுவார்கள் என்ற மதுப்பிரியர்களின் கணிப்புகள் பொய்யாகி வருகின்றன. ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்படுவதால் மதுப்பிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மது அருந்த முடியாததால் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, தென்னை, பனை மரங்களில் கள் இறக்குவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுகின்றனர். அதேபோல ஆங்காங்கே எதற்கும் துணிந்த மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் லலிதா ஜீவல்லரி திருட்டு பாணியில் சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் அள்ளிச் செல்லும் சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த நந்தியாலம் பகுதியில் அரசு மதுபான கடையில், பின்பக்க சுவரில் துளையிட்டு கொள்ளை நடந்துள்ளது. துளை வழியாக கடைக்குள் நுழைந்த நபர்கள் விலை உயர்ந்த மதுபானங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கடையின் சுவரில் துளையிட்டு இருப்பதைக் கண்டு ரத்தனகிரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட மதுபானங்களின் மதிப்பு 2 லட்ச ரூபாய் மேல் இருக்கும் என கூறப்படுகிறது . இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து காவல் துறையினர், சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.




திருப்பூர் மாவட்டம் தாராபுத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஷட்டரை துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளதாக அலங்கியம் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் நேரில் சென்று பார்த்த போது, டாஸ்மாக் கடையின் ஷட்டரை கட்டிங் எந்திரம் மூலம் வெட்டி துளையிட்டுள்ளனர். அந்த துளையின் வழியே கடைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஒரு இலட்ச ரூபாய் மதிப்பிலான 750 மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர். மேலும் திருடர்கள் மதுபாட்டில்களுடன் டி.வி.ஆர் ரெக்கார்டரையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து முள் வேலியில் வீசப்பட்டு இருந்த டி.வி.ஆர் ரெக்கார்டரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.




கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் 27 ம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. அக்கடையின் சுவரில் துளையிட்டும், முன் பக்க கதவின் பூட்டை உடைத்தும் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மதுபானக் கடைக்குள் நுழைந்தனர். 3 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் திருடி சென்றுள்ளனர். இதேபோல கடந்த 3 ம் தேதி கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின், பின்புற சுவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கடப்பாறையால் இடித்து துளையிட்டுள்ளனர். பின்னர் உள்ளே சென்று ஒன்றரை இலட்ச ரூபாய் மதிப்பிலான 96 பீர் பாட்டில்கள் மற்றும் 800 குவாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட மதுபாட்டில்களை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களில் குடிக்கு அடிமையானவர்களும், அதிக விலைக்கு விற்று இலாபம் பார்க்க நினைப்பவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இத்தகைய செயல்கள் குறையும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.