வாகனத் தவணை பணம் தொடர்பான தகராறில் இன்ஜினியரிங் மாணவரை குத்திக் கொன்ற வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், கோவை துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வந்தார். அவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததுடன், தனியார் கல்லூரியில் பகுதிநேர இன்ஜினியரிங் படித்து வந்தார்.
கொடைக்கானலில் சிறுவயது நண்பர்களாக இருந்த அஜித்குமார் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் கோவையில் வேலை செய்து வந்தனர். இவர்களுடன் பார்த்திபன் தொடர்ந்து பழகி வந்ததுடன், பண உதவியும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தவணை பணம் கேட்டு அழைத்துச் சென்று குத்திக்கொலை
கடந்த 15.02.2018 அன்று அஜித்குமார், பார்த்திபனை தொடர்பு கொண்டு மோட்டார் சைக்கிள் மாத தவணைத் தொகை செலுத்த பணம் தேவைப்படுவதாகக் கூறி குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு பிரவீன்குமாரும் இருந்துள்ளார். பணம் கேட்கப்பட்டபோது, தன்னிடம் பணம் இல்லை என்று பார்த்திபன் கூறியதால் தகராறு ஏற்பட்டது. அதில் அஜித்குமார் மற்றும் பிரவீன்குமார் இணைந்து பார்த்திபனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் நிலையம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்ததுடன், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை கோவை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம்-த்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமார் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார்.