சொத்துக்காக மதம் மாறியதாக பொய் சொல்லி, போலி சான்றிதழ்கள் காட்டி ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Continues below advertisement

சுப்பையா என்பவர், தமிழ் நாட்டில் பிறந்து மலேசியாவில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த நிலையில் சுப்பையாவின் மகள் கவிதா தன்னை ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்திருந்தார். நெல்லை டவுன் சிக்கர்தர் தெருவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் கவிதாவை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றி இருக்கிறார். இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கவிதா பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

அளிக்கப்பட்ட புகாரில் அவர், இம்ரான் என்பவர் மலேசியாவில் வேலை பார்த்ததாகவும், தனது தோழி ஒருவர் திருமண விழாவில் இருவரும் அறிமுகமானோம் என்றும், பின்னர் பேஸ்புக் மூலம் இம்ரான் தன்னிடம் பழகி, அதன்பிறகு நாளடைவில் எங்கள் பழக்கம் காதலாக மாறி என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறினார் என்று கூறியுள்ளார். 

Continues below advertisement

மேலும் அந்த புகாரில், "இம்ரான் தன் மத அடையாளத்தையும், பெயரையும் மறைத்து, தான் ஒரு இந்து என்றும் தனது பெயர் அருண்குமார் எனவும் பொய்யாக கூறி இருக்கிறார். ஆனால் அவரிடம் பழகிய பிறகுதான் அவர் ஒரு இஸ்லாமியர் என்ற உண்மை தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது தான் இந்துவாக மதம் மாறி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். பின்னர் தனது பெயரை அருண் என பெயர் மாற்றி இந்து மதத்திற்கு மாறியதாகவும் எனவே என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சினார்.

அதை நம்பி கடந்த 2019-ஆம் ஆண்டு, அக்டோபர் 30 ஆம் தேதி, அன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கோவிலில் வைத்து இம்ரானை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை பதிவு செய்ய கூறியபோது துபாயில் முக்கிய வேலை இருப்பதால் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார். திருமணத்துக்கு பிறகு அவருடன் துபாய் சென்று விட்டேன். அதன் பிறகுதான் அவர் போலியாக பெயர் மாற்றம் செய்ததும் பிறப்பு சான்றிதழ் முதல் பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்ததும் தெரியவந்தது. மேலும் என்னை ஏமாற்றி பல முறை உடலுறவு மேற்கொண்டார். தற்போது நான் ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளேன்." என்று எழுதி உள்ளார்.

மேலும் இதுபற்றி அவர் பேசுகையில், "இந்த பிரச்சனை குறித்து அவரிடம் கேட்டபோது, பணத்திற்காக தான் ஏமாற்றி உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறி என்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். அவரது சகோதரி மற்றும் தாயாரும் என்னை தொடர்பு கொண்டு பணம் தருமாறு மிரட்டுகின்றனர். என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.

இந்த மனுவின் அடிப்படையில் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இம்ரான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவர் கைது செய்யப்படாத நிலையில் கவிதா தனக்கு நீதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார். இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவள். இஸ்லாமியரான இம்ரான் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். போலியாக ஆவணங்கள் தயார் செய்து இந்து மதத்திற்கு மாறியதாக பொய் கூறினார். என்னிடம் 14 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். என்னைப் போன்று பல பெண்கள் அவரிடம் ஏமாந்துள்ளனர். எனவே இம்ரானை உடனடியாக கைது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்", என்று தெரிவித்தார்.