கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம், தர்மலட்சுமி ஆகியோரின் மகன் முத்து மாரியப்பன். இவர்கள் தற்போது கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேம்ரூனிற்கு சென்று அங்குள்ள ஆயில் மற்றும் கேஸ் நிறுவனத்தில் சி.என்.சி. மெசின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.  அங்கு முத்து மாரியப்பன் பணிபுரிந்த அதே நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகளான வால்மி இனாங்கா மொசொக்கே ஆகிய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.


இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மணப் பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கே இந்தியாவிற்கு சென்று, இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். 




இதற்கு அவரது தாயாரும் உறவினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களது உறவினர்கள் 10 பேருடன் இந்தியா வந்துள்ளார். இந்த நிலையில் இன்று கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ முத்து மாரியப்பன், வால்மி இனாங்கா மொசொக்கே திருமணம் வெகு விமரிசையாக இந்து முறைப்படி நடைபெற்றது.


இதில் மணமகளை பட்டு புடவை கட்டி அவரது உறவினர்கள் மலர் பந்தலின் கிழ் ஊர்வலமாக மண மேடைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து புரோகிதர் வேத மந்திரம் ஓத ஆப்பிரிக்க மணப் பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கேவிற்கு தமிழக மணமகன் முத்துப்பாண்டி தாலி கட்டினார். தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக் கொண்டு அம்மி மிதித்து மெட்டி அணிவித்தார். அதேபோல் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்தனர். தொடர்ந்து உறவினர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டு குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.




இது குறித்து பேசிய மணப்பெண் வால்மி இனாங்கா மொசொக்கே வணக்கம் என தமிழில் பேச தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியக் கலாச்சாரம் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், இந்தியர்களை பிடிக்கும் எனவும், அதனால் இந்து முறைப்படி திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் தெரிவித்தார். பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால் இந்தியா வந்து திருமணம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் தானும் இந்தியாவில் ஒருவர் ஆகிவிட்டதாகவும் இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண