தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடிகளை விருந்து அழைத்து வெட்டி கொலை செய்துள்ளார் ஈவு இரக்கமற்ற உடன் பிறந்த சகோதரன். 


காதலுக்கு ஏது மதம், ஜாதி. மனம் ஒத்து போனால் காதல் மலர்கிறது. தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் எத்தனை வளர்ந்தாலும் காதலர்களுக்கு ஏற்படும் வேதனையும், சோகமும் யாராலும் மறுக்க முடியாத ஒன்று. கண்ணிருந்தும் குருடு, காதிருந்தும் செவிடு காதலிக்க ஆரம்பித்து விட்டால் உலகையே மறந்து விடுவார்கள் என்பார்கள். ஆனால் காதலுக்கு எதிரிகள் இமயம் போல் அல்லவா வளர்ந்து நிற்கிறார்கள். அப்படி காதலித்து திருமணம் முடிந்த 5 நாட்களிலேயே அண்ணனின் அரிவாள் வெறிக்கு தங்கையும், அவரது கணவரும் உயிரை கொடுத்துள்ளனர். 





தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சரண்யா (24). நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன் (31).  இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.





வேலை பார்த்து வந்தபோது கண்ணும் கண்ணும் முட்டிக் கொள்ள காதலில் விழுந்தனர். எத்தனை முகமூடிகள் போட்டாலும் காதலை மறைக்க இயலுமா. அதுபோல் இருவரின் காதலையும் சரண்யாவின் வீட்டார் ஏற்க மறுத்துள்ளனர். அதுமட்டுமா உறவினர் ஒருவருக்கு, சரண்யாவை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் திட்டமிட்டு வந்துள்ளனர். என்ன வில்லத்தனம் என்று நினைத்த சரண்யா இதுகுறித்து மோகனிடம் தெரிவிக்க, இந்த ஜோடியும் பெற்றோரை எதிர்த்து கடந்த 5 தினங்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.


அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 

இத்தகவலை சரண்யா தனது பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள்  அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் முடிந்த நிலையில் சரண்யாவுக்கு அவரது அண்ணன் சக்திவேல் மணமக்களுக்கு விருந்து வைக்க வேண்டும் எனக் கூறி வரவழைத்துள்ளார். அண்ணன் சப்போர்ட் கிடைத்து விட்டது என்று நம்பி சரண்யாவும், மோகனும் நேற்று சென்னையிலிருந்து சோழபுரம் துலுக்கவேலிக்கு வந்தனர்.


அண்ணனின் வெறிச்செயல் 

பின்னர் மாலை வீட்டுக்கு வந்தபோது, அங்கு வந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல்(31) மற்றும் சக்திவேலின் உறவினர் தேவனாஞ்சேரியைச் சேர்ந்த ரஞ்சித் இருவரும் சேர்ந்து வீட்டு வாசலிலேயே புதுமணத் தம்பதி சரண்யா- மோகனை சரமாரியாக அரிவாளால் வெட்டி தள்ளினர். கொலை வெறி தாண்டவமாடியதில் இளம் திருமண ஜோடிகள் அதே இடத்தில் பரிதாபமாக உயிரை விட்டனர்.


விருந்துக்கு வாங்க என்று அழைத்து வெறித்தனமாக வெட்டித்தள்ளிய அண்ணனின் கொடூர முகம் முன்பே தெரிந்திருந்தால் சரண்யா வராமல் இருந்து இருப்பாரோ என்று பொதுமக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். தாலியின் மஞ்சள் வாசனை கூட போகாத நிலையில் அண்ணனின் கொடூர குணத்தால் உயிரை இழந்துள்ளார் சரண்யா. கூடவே நெஞ்சம் நிரம்பி காதலித்து கரம் பிடித்த கணவர் மோகனின் உயிரும் பறி போய் உள்ளது.

தகவலறிந்த சோழபுரம் போலீஸாருக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இருவரது உடலையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சோழபுரம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சக்திவேல் மற்றும் ரஞ்சித்தை தேடி வந்தனர். இந்நிலையில் தப்பிச் சென்ற சக்திவேல் மற்றும் ரஞ்சித் இருவரையும் திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி கைது செய்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா கந்தபுனேனி நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண