திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை தனியார் நிறுவன ஊழியர் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


திருமணத்தை மீறிய உறவு:


கொல்கத்தாவைச் சேர்ந்த ஷேக் சுகைல் என்பவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு தாம்சிம் பாபியன் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் பெங்களூருவில் உள்ள சரியாபாளையா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இதனிடையே சுகைல் அடிக்கடி குடித்து விட்டு வந்து தாப்சிமுடன் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 


இதனைத் தொடர்ந்து தாப்சின் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறியதால் ஆத்திரமடைந்த சுகைல் அவரை சமாதானப்படுத்தி கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றார். அதேசமயம் பெங்களூருவில் இருந்தபோது தாப்சினுக்கு பக்கத்து வீட்டுக்காரரான நதீம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணத்தை மீறிய தொடர்பை வைத்துள்ளார். இதுதொடர்பாகவும் சுகைல் மனைவியுடன் கடும் சண்டையிட்டுள்ளார். 


கழுத்து அறுத்துக் கொலை:


இதற்கிடையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் இருந்து வெளியேறி தாப்சின் பெங்களூரு வந்து நதீமுடன் வாழ தொடங்கியுள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுகைல் மனைவி இருக்குமிடம் அறிந்து பெங்களூரு வந்துள்ளார். தாப்சினை தன்னுடன் வந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் இதற்கு அவர் மறுக்கவே இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


இதில் ஆத்திரமடைந்த சுகைல் மனைவி தாப்சினை கழுத்தறுத்து கொன்றார். மேலும் நதீம் - தாப்சினுக்கு பிறந்த குழந்தையையும் சுகைல் தாக்கியுள்ளார். இதுகுறித்து ஹெண்ணூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷேக் சுகைலை கைது செய்தனர். மேலும் தாப்சின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெங்களூரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.