ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வேகம் எடுத்த நிலையில், சமீப நாட்களாக வழக்கின் விசாரணை தொய்வடைந்து வந்தது. இந்நிலையில், சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சி.இ.ஓவுமான  விவேக் ஜெயராமன் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.


கோடநாடு பங்களாவோடு தொடர்புடைவர் விவேக் என்பதால், அவரை சென்னையில் இருந்து கோவை வரச்சொல்லி, தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஏற்கனவே, இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கூறப்படும் சயான், மனோஜ் உள்ளிட்டோரிடமும் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனராஜின் சகோதரர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ள நிலையில், தற்போது விவேக்கிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.


கோடநாடு வழக்கில் பிடிபட்ட கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது சில கைக் கடிகாரங்களும் குரங்கும் பொம்மையும்தான் என போலீசார் தெரிவித்த நிலையில், உண்மையில் கோடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்பது அந்த பங்களாவிற்குள் ஜெயலலிதாவோடு சென்று வந்த சசிகலா, தினகரன், விவேக், இளவரசி உள்ளிட்டோருக்குதான் தெரியும் என்று கூறப்பட்டு வந்தது. அதனால், போலீசார் சசிகலா-வையும் அவருடன் தொடர்புடையோர்களையும் விசாரணை வளையத்திற்கு கொண்டுவந்தால் மட்டுமே கொள்ளை எதற்காக நடந்தது ? அங்கு என்ன இருந்தது என்பது தெரியும் என பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது விவேக்கிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


கொள்ளை நடந்த நாளில் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தார் என்பதால், அந்த நேரத்தில் அவரை சிறையில் சென்று பார்த்தவர்களில் விவேக் ஜெயராமன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்களாவோடு தொடர்புடையவர்கள் என்பதால், முதலில் விவேக், அடுத்து தினகரன், பின்னர் சசிகலாவிடம் விசாரணை நடத்தவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.


இதுவரை கோடநாடு பங்களாவிற்குள் சென்று முறையாக  போலீசார் விசாரணை நடத்தாத நிலையில், பங்களாவிற்கு ஜெயலலிதா வைத்திருந்தது என்னென்ன ? கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட கைக்கடிகாரங்களும், குரங்கு பொம்மையும் பங்களாவிற்குள்தான் இருந்ததா என்பன உள்ளிட்ட கேள்விகளை விவேக் ஜெயராமனிடம் போலீசார் முன் வைத்துள்ளனர். விவேக் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தக் கட்ட விசாரணையை போலீசார் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். விரைவில் சசிகலாவும் விசாரிக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம்.