கரூர் அருகே திருமணமாகிய மூன்று நாளில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (50). இவரது மகளான ரம்யா என்ற இளம் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற சித்திரைச் செல்வன் என்ற இளைஞருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 


 




திருமணம் முடிந்த கையோடு நேற்று புதுமணப்பெண் ரம்யா தனது கணவருடன் தாய் வீட்டிற்கு விருந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். உறவினர்கள் வெளியே இருந்த நேரத்தில் வீட்டில் இருந்த தனி அறை ஒன்றில் ரம்யா தூக்கு போட்டுள்ளார். நீண்ட நேரம் அவர் வெளியே வராததை அறிந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரம்யா பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து மாயனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


 




 


சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரம்யா உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடந்து மூன்று நாளில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சந்தேகத்தையும், உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிந்து கைது செய்த அனைத்து மகளிர் போலீசார்.


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (30). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 நாட்கள் முன்பு சிறுமி மாயமானதையடுத்து சிறுமியின் தாயார் குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


அதனையடுத்து விசாரணையில்  சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பாக்கியராஜை பிடித்த குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து  கைது செய்தனர். பின்னர் குளித்தலை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.