கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகர் 5வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சத்யபாமா. இவரது மகன் சஞ்சய் (23). இவர் தந்தை பிரிந்து சென்றதால் தாயுடன் வசித்து வந்தார். கேட்டரிங் படித்துள்ளார். தாய் மேற்படிப்பு படிக்க வைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தாய் அடிக்கடி திட்டி உள்ளதாக கூறப்படுகிறது.




இதனால் விரக்தியடைந்த சஞ்சய் கடந்த 6ம் தேதி மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சஞ்சய் ஆன்லைனில் பிரீ பயர் விளையாட்டு, ஆன்லைன்  ரம்மி விளையாடி வந்ததாகவும், ஒரு சில முறை வெற்றிப்பெற்றதால்  அதற்கு அடிமையானதகவும் கூறப்படுகிறது.


 




 


இந்நிலையில், சஞ்சய் ஐடியை யாரோ ஒருவர் ஹேக் செய்து  கேமில் தோற்றதால், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,00,000 வரை எடுக்கப்பட்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த சஞ்சய்  “கேம்முக்கு யாரும் அடிட் ஆகாதீங்க. என்ன மாதிரி ஏமாறதீங்க. எதாவது சாதிங்க” என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.


 


 




அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், ஆங்கில எழுத்துகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  கூட இருந்தே எப்படிடா குழிப்பறிக்க தோணுது. இப்பவும் ஒண்ணு இல்ல. யார்னு சொல்லிடுங்க  வேறு நம்பர்ல இருந்து அனுப்பியிருங்கடா ஐடி பாஸ் என்றும், விஜயதேவரகொண்டா ஸ்டில்   படத்தை வைத்து கோர்ப்பதற்கு இரு கைகள் வருவதுப் போலவும், கைகளை கோர்ப்பது போலவும், கொடி பறப்பது போலவும் வீடியோ வைத்து, ரொம்ப அமைதியாயிட்டா ரொம்ப துறுதுறுனு இருப்ப என்றும், ஆங்கில வார்த்தைகளில், டிப்ரஷனா இருக்கு, யாரும் கேம்முக்கு அடிக்ட் ஆகாதீங்க. அழும் இமோஜி படத்துடன் என்ன மாதிரி யாரும் ஏமாறதீங்க என்றும், லைப்ல ஏதாச்சும் அச்சீவ் பண்ணுங்க எனவும் ஸ்டேடஸ் வைத்துள்ளார்.


 


 




இதனால், ஆன்லைனில்  ஃப்ரீ பயர், ரம்மி விளையாட்டுக்கு அடிமையாக இருந்த சஞ்சயின் ஐடியை யாரோ  ஹேக் செய்து விளையாடி அவர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகக்கூறி, சஞ்சயின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அனைவரும் பகிர்ந்து வருவதால் அவர் வசிக்கும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது வேலைக்கு செல்லாததால் அவரது தாய் அடிக்கடி திட்டி வந்துள்ளதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்ததும், குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்  தெரிவித்தனர்.