கரூர் குளித்தலை அருகே தனியார் கல்லூரி வேனில் சென்ற இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை மற்றொரு மாணவர் கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் நித்தீஷ் குமார். இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புலியூரில் உள்ள செட்டிநாடு இன்ஜினியரிங் என்ற தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் முசிறியில் இருந்து கல்லூரிக்கு சொந்தமான வேனில் சென்று வருகிறார். வேனில் அவருடன் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவன் அண்ணாமலை என்பவரும் பயணித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் சில நாட்களாக வேனில் பேசி கொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


 




இதுகுறித்து அண்ணாமலை கல்லூரிக்கு வேனில் சென்றபோது நித்தீஷ் குமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு நீத்தீஷ்குமார் பதில் அளிக்காமல் இருக்கவே, அப்போது தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். மாணவன் நிதிஷ்குமாரின் அலறல் சத்ததை கேட்டு வேனில் பயணித்த சக மாணவர்கள் கூச்சலிடவே வேன் டிரைவர் உடனடியாக  குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வேனில் வந்து நித்தீஷ்குமாரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


காயமடைந்த நிதீஷ்குமார் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதில் கழுத்து பகுதியில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவன் அண்ணாமலையை குளித்தலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.