கரூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கரூர், வடிவேல் நகர் அடுத்த சக்தி நகர் குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அமராவதி (72). அவரது கணவர் சுப்பிரமணி. இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.


 




 


இந்த நிலையில் சுப்பிரமணி  காலை உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். சுப்பிரமணி வெளியூர் சென்ற நேரம் பார்த்து, அமராவதி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து மூதாட்டியின் தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். கொலை குறித்து அருகில் இருந்தவர்கள் கரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


 


 




இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 


ஏற்கனவே வெங்கமேடு அடுத்த அரசு காலனி பகுதியில் பெண்மணி ஒருவர் கொலையான நிலையில், அடுத்தடுத்து கரூர் பகுதியில் இரண்டாவது கொலை நடந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


 


 




 


விஷம் குடித்து முதியவர் உயிரிழப்பு


கரூர் அருகே உள்ள அப்பிபாளையம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெரியசாமிக்கு இடது கால் அகற்றப்பட்டுள்ளது. இதனால் வலியால் துடித்து வந்த பெரியசாமி மனமுடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து  தான்தோன்றி மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.