கர்நாடகாவில் இளநிலை உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வின் வினாத்தாளை கசியவிட்ட தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (KPTCL) இளநிலை உதவியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் வினாத்தாளை கசியவிட்டதாக தெரிவித்து கடக்-பேட்டகேரியில் உள்ள நகராட்சி கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் அவரது மகனை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது.


கடக் நகராட்சி கல்லூரியின் துணை முதல்வர் மாருதி சோனாவனே மற்றும் அவரது மகன் சமித் குமார் ஆகியோரை கர்நாடக காவல்துறையினர் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர். கடக்-பெடகேரி நகரில் உள்ள 21 தேர்வு மையங்களில் ஒன்றான கடக் நகராட்சியில் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதி தேர்வு நடைபெற்ற போது மேற்பார்வையாளராக அக்கல்லூரியின் துணை முதல்வர் மாருதி சோனாவனே நியமிக்கப்பட்டார். அப்போது அவரது மகன் சமித் குமார் பத்திரிக்கையாளராக நடித்து தேர்வு மையத்திற்கு வந்து கேள்விகளை புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ்அப்பில் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 


அதேபோல், பெலகாவி மாவட்டத்தில் தேர்வெழுதும்போது ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தி சித்தப்பா மடிஹள்ளி என்ற நபர் தேர்வெழுதியுள்ளார். இதை கண்டுபிடித்த தேர்வறை மேற்பார்வையாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து கைது செய்யப்பட்டார். இவர் வாட்ச் மூலம் யாரோ ஒருவரிடம் இருந்து பதில்களைப் பெறுவதை கண்டறிந்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், வினாத்தாள் கசிவில் கடக் நகராட்சி கல்லூரியின் துணை முதல்வர் மகன் சமித் குமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 


வினாத்தாள் கசிவின் பின்னணியில் மேலும் சிலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் காவல்துறையினர், இதில் அதிகளவில் பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக தகவலிம் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


முன்னதாக, காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை தேர்வு முடிவுகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகப் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல் துணை ஆய்வாளர் ஆட்சேர்ப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான தேர்வு கடந்த அக்டோபர் 3, 2021 ம் தேதி நடைபெற்றது, அதில் சுமார் 54,041 தேர்வாளர்கள் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.