கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த நரிக்குறவர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை குடும்பத்தினரோடு கும்மியெடுத்து மண்டையை உடைத்த தரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

பொதுவாக ஊசி பாசிமணி என விற்பனை செய்து நாடோடி வாழ்க்கை வாழும் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வீடு என்னவோ பேருந்து நிலையம், பயணிகள் நிழல் குடை தான். இந்த இடங்களில் இரவை கழிக்கும் இவர்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுவதும் சில சமயங்களில் நரிக்குறவ பெண்கள் போதை ஆசாமிகளால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதும் அதை சவாலாக சமாளித்து தற்காத்து கசப்பான சம்பவங்களை கடந்தும் தங்கள் இயல்பு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

 



 

 

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த நரிக்குறவர் பெண்களை போதை ஆசாமி ஒருவர் பாலியல் தொந்தரவு செய்தாக கூறப்படுகிறது. அதில் விழித்து கொண்ட குடும்பமே அந்த ஆசாமியை கும்மியெடுத்து மண்டையை உடைத்த சம்பவம் அரங்கேறியது. குளச்சல் பேருந்து நிலையத்தை வாழ்விடமாக அமைத்துக்கொண்ட நரிக்குறவர் குடும்பம் ஒன்று சுற்றுவட்டார பகுதியில் ஊசி பாசிமணிகளை விற்பனை செய்து விட்டு குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்குவது வழக்கம்.

 

அப்படி தூங்கும் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்களை விடியற்காலையில் போதையில் வரும் மர்ம ஆசாமி ஒருவர் தினந்தோறும் பாலியல் தொந்தரவு செய்து விட்டு அவர்கள் சத்தம் போடவே அங்கிருந்து தப்பி செல்வது வாடிக்கையாக இருந்ததாக கூறப்படுகிறது. இன்று விடியற்காலையிலும் பேருந்து நிலையம் வந்த அந்த போதை ஆசாமி தூங்கி கொண்டிருந்த  பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுதாக கூறப்படுகிறது. அந்த பெண் சத்தம் போடவே விழித்து கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் அந்த போதை ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்ததோடு "ஏழை பெண்கள் என்றால் எழக்காரமா" "முதுகுக்கு பின்னால் குத்துறவன் நல்லவனா நீ" கேள்வி கணைகளால் வறுத்தெடுத்ததோடு குடும்பத்தினரோடு அந்த ஆசாமியை  கல்லால் தாக்கி மண்டையை உடைத்தனர்.

 



 

இதை கண்டு அங்கு திரண்ட பொதுமக்கள் நரிக்குறவர் குடும்பத்தினரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்த நிலையில்  தாக்குதலில் மண்டை உடைந்த போதை ஆசாமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விசாரித்த போது அந்த நபர் கோடிமுனை பகுதியை சேர்ந்தவர் என்பவர் என தெரியவந்தது. ஆனால் அந்த போதை ஆசாமி தவறை உணர முன்வராமல் நரிக்குறவ குடும்பத்தையே கடலில் தூக்கி போடுவேன் என சவால் விட்டு நின்று கொண்டிருந்த நிலையில் பொதுமக்களும் அவருக்கு உதவி செய்ய முன்வராமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த நிலையில் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.