ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்திய மாணவியை பேராசிரியர் கண்டித்து வெளியே அனுப்பியதால் மன உளைச்சலுக்கு உள்ளான முதலாம் ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் பிரபல  தனியார் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் அனைத்து வகையான மருத்துவ படிப்புகளை பயின்று வருகின்றனர்.



இந்நிலையில் இன்று காலை, சவீதா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சுகாதார அறிவியல் தொடர்புடைய மருத்துவ படிப்பு படிக்கும் அம்பத்தூர், புதூர் பகுதியை சேர்ந்த சோனாலி(20) என்ற மருத்துவக் கல்லூரி மாணவி பயின்று வருகிறார்.  கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் சோனாலி தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்தால் அப்போது தேர்வு அறைக்கு வந்த தேர்வு கண்காணிப்பாளர் சோனாலி செல்போன் வைத்திருந்ததை அறிந்து  செல்போனை பிடுங்கி கொண்டு அவரை கண்டித்து வசைபாடியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.



தேர்வு எழுதிய ஏழாவது மாடியிலிருந்து கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு மூன்றாவது மாடிக்கு வந்த சோனாலி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் தலை மற்றும் உடல்களில் பலத்த காயமுற்று சோனாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சோனாலியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு  ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சோனாலி தற்கொலைக்கு காரணம் தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்தி கையும் களவுமாகப் பிடித்து வெளியேறியதால் மனஉளைச்சலுக்கு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.



இதுகுறித்து காவல்துறை தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‛முதற்கட்ட விசாரணையி இதற்குமுன் ஒரு முறை மாணவி தேர்வு எழுதும் போது செல்போனுடன் இதே பேராசிரியரிடம்  பிடிபட்டதாக கூறப்படுகிறது, இது 2-வது முறை என்பதால் பேராசிரியர் மிகவும் கோபத்துடன் திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா என்று முதற்கட்ட விசாரணையில் துவங்கியுள்ளோம். இருந்தும் இந்த வழக்கில் கல்லூரி வளாகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பதால் கல்லூரி நிர்வாகத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்பது குறித்து மாணவியின் உடன் படிக்கும் மாணவ மாணவிகளிடம் தற்போது விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளோம். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணை நடந்து முடிந்த பிறகே தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியே வரும்,’ என தெரிவித்தனர்.



காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி வளாகத்திலேயே மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050