காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா தேவரியம்பாக்கம் கிராமத்தில், ஏ.எஸ்.என் கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஜீவானந்தம் என்பவர் கேஸ் குடோன் நடத்தி வருகிறார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் நேர்முக உதவியாளர்கள் பணியாற்றிய அஜய்குமார், தற்பொழுது தேவேரிம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவரின் தம்பி ஜீவானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.



 

 

பயங்கர தீ விபத்து

 

இந்த கேஸ் குடோனில் இருந்து ஒரகடம் சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6:30 மணி அளவில் வீட்டின் அருகில் உள்ள கேஸ் குடோனில் திடீரென தீப்பிடித்தது , தொடர்ந்து கேஸ் குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது.



 

இதன் காரணமாக கேஸ் குடேன் அருகிலேயே இருந்த ஜீவானந்தம், பூஜா 19, கிஷோர் 13, கோகுல் 22, அருண் 22, குணால் 22, சந்தியா 21, சக்திவேல் 32 , நிவேதா 21, தமிழரசன் 10, சண்முகப்பிரியன், ஆமோத்குமார், என மொத்தம் 12 பேரும் 50 முதல் 90% தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இவர்கள் அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர்,வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ 

க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்தனர்  .

 

 

முடக்கி விடப்பட்ட மீட்பு பணிகள்

 

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஆர்நிஷா பிரியதர்ஷினி தலைமையில் காஞ்சிபுரம், மறைமலைநகர் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் 2 1/2 மணி நேரம் போராட்டம் பின்பு தீயை அணைத்தனர். மேலும் அப்பகுதியில் சிலிண்டர் வாயு கசிவு காரணமாக யாரும் அருகே அனுமதிக்கப்படாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கேஸ் குடோனில் இருந்து கேஸ் வெளியேறி வருவதால் பகுதி முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி இன்னும் கேஸ் கசிவு இருந்து வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் எரிவாயு சிலிண்டர் குடோனின் உரிமையாளர், ஜீவானந்தத்தின் அண்ணன் அஜய் குமாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

செய்தியாளரை சந்தித்த வடக்கு மண்டல ஐஜி

 

இதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி ஆகியோர் வந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்து காவல்துறை சார்பில் மீட்பு பணிகளை வேகம் எடுக்க உத்தரவிட்டார். செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, கேஸ் குடோன் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட நம்பர் அனுமதி வாங்கி இருக்கிறார், ஆனால் எந்த மாதிரியான அனுமதி வாங்கப்பட்டுள்ளது, என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் கூறுகையில் படுகாயம் அடைந்த நபர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

 



 

செங்கல்பட்டு மருத்துவமனையில்...

 

சிறு , குறு மற்றும் தொழில்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் பொழுது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.



 

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை

 

பலத்த தீக்காயம் அடைந்த 12 நபர்கள் சிகிச்சை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஏழு நபர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  பூஜா ,அருண், சந்தியா, ஜீவானந்தம் குணால் ஆகிய ஐந்து பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 


 


 


இதுகுறித்து வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக உள்ள அஜய்குமார், மனைவி சாந்தி, உரிமையாளர் ஜீவானந்தம், பொன்னிவளவன் மற்றும் மோகன் ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்