ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் செல்போன் கடை உதவி மேலாளர் கைது செய்யப்பட்டார். வீட்டில் உள்ள எலக்ட்ரிக் ஸ்டவ்வில் மறைத்து வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

 

வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளை

 

காஞ்சிபுரம் (Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட செல்லப்பெருமாள் நகரில் வசித்து வருபவர் ராஜாமணி (40). இவர் அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் டவுனில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.

 

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார்

 

இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி அன்று இவரது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 25 பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளைடித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜாமணி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தடயங்களை சேகரித்து அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தேடிவந்தனர்.



 

திருடனைப் பிடிக்க வழிகாட்டிய சிசிடிவி

 

மேலும், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் 20க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சென்னை போரூரில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் வீட்டில் பதுங்கி இருந்த பிரேம்குமார் (30) என்பவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். 



 

எலக்ட்ரிக் ஸ்டவ்வில்.. 

 

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை வீட்டில் உள்ள எலக்ட்ரிக் ஸ்டவ்வில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் எலக்ட்ரிக் ஸ்டவை கழட்டி அதிலிருந்து சுமார் 25 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிரேம்குமாரை ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பிரேம்குமார் சென்னையில் உள்ள தனியார் செல்போன் விற்பனை கடையில் உதவி மேலாளராக வேலை செய்து கொண்டு, இது போன்று ஆங்காங்கே திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.  பின்னர் பிரேம் குமார் மீது வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.