காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி

 

காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான உறுப்பு கல்லூரியான, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி காஞ்சிபுரம் என்ற கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில், நான்கு துறைகளில் சுமார் 1000 மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர்.



 

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கல்லூரி என்பதால், அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே இக்கல்லூரியில் வசூலிக்கப்படும். மிகவும் குறைந்த கட்டணத்தில் இந்த கல்லூரியில் பொறியியல் பயிலலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்லூரியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனித்தனியே தங்கி பயில்வதற்கு, விடுதி வசதிகளும் உள்ளன. இக்கல்லூரில் நிரந்தர பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் இதர பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

 

முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்

 

இக்கல்லூரியில், வங்கி கணக்குகளை நிர்வகித்து வந்த பிரபு என்பவர் செய்த முறைகேடு செய்த முறைகேடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபு , இக்கல்லூரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் கல்லூரி கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளிடம் டெபாசிட் பணம் பெறுவது வழக்கம். அவ்வாறு பெறப்படும், பணம் வங்கியில் நிரந்தர வைப்பு நிதி ( FD) கணக்கில், செலுத்தப்படும். 4 வருட படிப்பை படித்து முடித்த, பிறகு மாணவ, மாணவிகளுக்கு அப்பணம் மீண்டும் செலுத்தப்படும்.129 மாணவர்களுக்கு பிப்ரவரி மாதமே,செலுத்த வேண்டிய தொகை, கடந்த மாதம் வரை செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது.

 

வங்கி கணக்கில் இருந்த "401" ரூபாய்

 

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவ, மாணவிகள் தொடர் புகாரை தெரிவித்து வந்துள்ளனர். இதனை அடுத்து, இதுகுறித்து விசாரிப்பதற்காக கல்லூரி முதல்வர் கவிதா, வங்கி கிளைக்கு சென்று விசாரித்த பொழுது, வங்கி கணக்கில் 401 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் வங்கி கணக்கில் சுமார் 1 கோடியே 50 லட்சம் இருப்பதாக பிரபு தெரிவித்துள்ளார்.

 



 

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது, மற்றொரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. அதாவது கல்லூரி முதல்வர் ( DEAN UCEK) பெயரில் இருக்கும் மற்றொரு கணக்கிலிருந்து, சுமார் 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை, கல்லூரி முதல்வர் ஒரு குறிப்பிட்ட நபரின் வங்கி கணக்கிற்கு செலுத்தும் வேண்டுமென, கடிதத்துடன் கூடிய காசோலை ஒன்றை கொடுத்த அனுப்பியதாக பிரபு கொடுத்துள்ளதாக, வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் கல்லூரி முதல்வர் கவிதாவோ, நான் இதுபோன்ற எந்தவித காசோலையும் கொடுக்கவில்லை, கையெழுத்தும் போடவில்லை, இது போலியானது என தெரிவித்துள்ளார்.

 

இஷ்டத்திற்கும் விளையாடிய பிரபு

 

இதேபோல் பிற வங்கி கணக்குகளையும் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவற்றையும் விசாரிக்க துவங்கி உள்ளனர். கல்லூரிக்கு சொந்தமாக உள்ள 9 வங்கி கணக்குகள் மற்றும் 7 நிரந்தர வைப்பு வங்கி கணக்குகளை ஆய்வு மேற்கொண்ட பொழுது, அவற்றிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கல்லூரி மாணவர்கள் செலுத்தும், விடுதி கட்டணம் உள்ளிட்டவர், பணங்களை நிரந்தர வைப்பு கணக்கில் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் வரும் பணத்தை வைத்து, விடுதி மற்றும் கல்லூரி இயங்குவது வழக்கம்.

 



ஆனால் அவ்வாறு துவங்கப்பட்ட 7 நிரந்தர வைப்பு கணக்குகளும், முதிர்வு தேதிக்கு  ( maturity date )  முன்னதாகவே முதல்வரின் போலி கையெழுத்து மற்றும் போலி லெட்டர் பேட் மூலம் பிரபு பணத்தை எடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோன்று பல்வேறு காலகட்டத்தில், கல்லூரி வங்கி கணக்கில் இருந்து, வெவ்வேறு நபர்களுக்கு பல லட்ச ரூபாயை, பிரபு முறைகேடான முறையில், பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தி இருப்பது, பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுவரை பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில், 3 கோடியே 80 லட்சம் பல்வேறு வகைகளில் முறைகேடு சம்பவங்களில் ஈடுபட்டு, பணத்தை எடுத்து பிரபு செலவு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. 

 

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

 

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கவிதா காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கல்லூரி முதல்வர் கவிதாவிடம் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.



 

பரிதவிக்கும் கல்லூரி மாணவர்கள்

 

கல்லூரி வங்கி கணக்கில் பணம் இல்லாததால், வைபை (Wifi) கட்டணம் கூட செலுத்த முடியாமல், கல்லூரி நிர்வாகம் தவித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக, வைபை கட்டணம் செலுத்தாததால், கல்லூரியில், வைஃபை இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகை கூட செலுத்தப்படாமல், இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, இதனால் இன்னும் சில நாட்களில் சிரமங்கள் ஏற்படலாம் என தெரிகிறது. உடனடியாக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.