செங்கல்பட்டு அருகே  புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மணப்பெண், உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (28). இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சரவணனும் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தை சேர்ந்த தாமோதரன் என்பவரது மகள் ஸ்வேதா (எ) ராஜராஜேஸ்வரியும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சரவணனுக்கும், ராஜராஜேஸ்வரிக்கும் திருமணம் நடைபெற்றது.


பிரேத பரிசோதனைக்காக


தொடர்ந்து தம்பதி இருவரும் மறு வீட்டிற்காக திம்மாவரம் வந்துள்ளனர். நேற்றிரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தம்பதி இருவரும் தங்களது அறைக்கு சென்றுள்ளனர். அதிகாலையில், ராஜராஜேஸ்வரி எழுந்து பார்த்தபோது சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அனைவரும் ஓடிசென்றுபார்த்தபோது சரவணன் உயிரிழந்தது தெரிய வந்தது.  இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தீவிர விசாரணை 


மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சரவணனின் மனைவி ராஜராஜேஸ்வரி, மாமனார் தாமோதரன் மற்றும் மாமியார் அலமேலு ஆகியோரிடம் சரவணன் தற்கொலை தான் செய்து கொண்டாரா? அப்படியென்றால்  தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சரவணனின் உறவினர்கள் கூறுகையில், நேற்றிரவு சரவணன் தன்னுடைய பெற்றோரிடம் எப்போதும் போலவே பேசினார் என்றும் மறுநாள்  தனது மனைவியுடன் வெளியில் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் திடீரென சரவணனின் உயிரிழப்பு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)