திருச்சி மாநகரத்தில்   பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கெள்ள மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 61 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களில் காந்திமார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த தமிழ்செல்வி (வயது 52), பாலக்கரை பகுதியில் நவலடியான் (46), எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் குமார் என்ற வெள்ளெலி குமார் (40), கே.கே.நகர் பகுதியில் சக்திவேல் ஆகிய 4 பேர் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





மேலும் அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1,550 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்களைகைப்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (25), ஷெப்ரின் வில்சன் (23), மற்றும் அசன்அலி (24) ஆகிய 3 பேர் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா, போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 296 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் தடை செய்யப்பட்ட கஞ்ச, குட்க, போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்த 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக கஞ்சா, போதை ஊசி, மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கபட்டு வருகிறார்கள். மேலும் இளைஞர்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என புகார்கள் எழுந்துள்ளது. இதனால்  தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியானநடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.