காஞ்சிபுரம் மாவட்டம் தூலுக்கந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு, இவர் தனது பூர்வீக சொத்தை பதிவு செய்வதற்காக காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இரண்டாம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். இந்நிலையில் பூர்வீக சொத்தை பதிவுசெய்ய வருகை தந்தபோது அவருடைய சொத்தின் மதிப்பு அரசு கூறியதை விட அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.




சொத்தின் மதிப்பீடு அதிகமாக இருந்தால் அதனை பத்திரப்பதிவு செய்யும் போது ஆகும் செலவும் அதிகமாகும் என்பதால் அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தனது சொத்தை மறுமதிப்பீடு செய்ய மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்யுமாறு சார் பதிவாளர் சீனிவாசனிடம் பாலு  கோரிக்கை விடுத்துள்ளார்.




சொத்தை மறுமதிப்பீடு செய்ய மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனில் தனக்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும் என சார்பதிவாளர் சீனிவாசன், பாலுவிடம் கேட்டுள்ளார். லஞ்சம் தர மறுத்த காரணத்தினால் பாலுவின் சொத்து மதிப்பை மறுபரிசீலனை செய்ய மாவட்ட பதிவாளருக்கு பரிசீலனை செய்யாமல் அவருடைய கோப்புகளை சார்பதிவாளர் சீனிவாசன் கிடப்பில் போட்டுள்ளார்.




இதனால் மன உளைச்சலில் இருந்த பாலு, இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் சீனிவாசனை கையும் களவுமாக பிடிப்பதற்கு திட்டம் தீட்டினர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் படி பாலு, இன்று சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சப் பணத்தை வழங்கியுள்ளார்.


அப்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பாலு வழங்கிய லஞ்சப் பணத்தை வாங்கிய சார்பதிவாளர் சீனிவாசனையும், லஞ்சப்பணத்தை வைத்திருந்த அலுவலக தினக்கூலியாக வேலை செய்யும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.




மேலும் அவர்களிடமிருந்து  20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து போலீசார் கைது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்திய காரணத்தினால் தாலுகா அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.



இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்கையில், பாலு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திடீர் சோதனை செய்து அவரை பிடித்ததாகவும், இந்த சம்பவம் குறித்து தற்போது இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


லஞ்சம் வாங்குவதும் குற்றம் , லஞ்சம் கொடுப்பதும் குற்றம். லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளிக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் 044 - 2723 7139


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மேலும் படிங்க காஞ்சிபுரம் : முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வெட்டி படுகொலை : நடந்தது என்ன?