செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியை  சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் சரவணன் (32). இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ஆம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான MEESHO-இல்  இருந்து பேசுவதாக அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்ட மர்ம கும்பல் குலுக்கல் முறையில் உங்கள் செல்போன் எண் தேர்வாகி உள்ளது எனவும், பரிசு பொருளாக மகேந்திரா XUV 700 கார் பரிசாக தருவதாக கூறி உள்ளனர்.

 



இதனை நம்பிய சரவணன் Google Pay மூலம் தவணை முறையில் தினேஷ், பூஜா ராணி, ரஞ்சினி தேவி என்பவர்களுக்கு சுமார் 4,50,000 ரூபாய் வரை பணத்தை அனுப்பி உள்ளார். இதனைத்தொடர்ந்து பணத்தை அனுப்பி ஒரு வாரம் கழித்து,  தன்னை தொடர்புகொண்ட செல்போன் எண்ணுக்கு மீண்டும் அழைத்தபோது அனைத்து எண்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது

 



 

இந்நிலையில் , திட்டமிட்டு  ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் , உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் தெரிவித்துவிட்டு மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் செங்கல்பட்டு பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தமாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில்  406,420,66D ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 



Suicidal Trigger Warning..



வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)