சென்னை அருகே திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்த ஜோடி ஒன்று தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையின் புறநகர் பகுதியாக பெரும்பாக்கத்தில் உள்ள எழில் நகர் 5வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் செல்ஃபியா மேரி. இவருக்கு திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது. இவருக்கும் செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக வளர்ந்துள்ளது. தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த விஜய்க்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.


இவர்களின் தொடர்பு பற்றி இருவீட்டாருக்கும் ஒரு கட்டத்தில் தெரிய வந்ததை தொடர்ந்து விஜய், செல்ஃபியா மேரி  இருவரையும் கண்டித்துள்ளனர். ஆனாலும் அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தங்களது கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரையும் தவிக்க விட்டு விட்டு அதே பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். 


இப்படியான நிலையில் செல்ஃபியா மேரி தனது தோழி ரேகாவுக்கு செல்போனில் மெசெஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “என்னுடைய குடும்பத்தினர் நானும் விஜய்யும் சேர்ந்து வாழ விடமாட்டார்கள். நாங்கள் இருவரும் தற்கொலை செய்யப் போகிறோம்” என அவர் தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரேகா உடனடியாக பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். ஆனால் அதற்குள் இருவரும் உயிரை மாய்த்துக் கொண்டனர். வீட்டில் வரவேற்பறையில் விஜய் சால்வையில் தூக்கு போட்டும், செல்ஃபியா மேரி படுக்கை அறையில் தூக்கு போட்டும் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)